சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தென் மாவட்டங்களில் நிலவும் சாதியப் பதற்றங்கள் மற்றும் மதுரையில் நிகழ்ந்த லாக்-கப் மரணம் குறித்துத் தனது கவலையையும் கண்டனத்தையும் பதிவு செய்தார்.
"மதுரையில் சாதாரண அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபரின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து, சாதிப் பெயரைச் சொல்லி போலீசார் தாக்கியதாக அவரது தந்தை என்னிடம் கூறினார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது ஏன்? அவர் உயிரிழந்தது ஏன்? என்பதற்குப் போலீசார் உரிய விளக்கம் அளிக்கவில்லை. இந்தச் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
தென் மாவட்டங்களில் சாதிப் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்கவும், சட்டம்-ஒழுங்கைப் பேணவும் தேவைப்பட்டால் அந்தப் பகுதிகளில் உள்ள காவல் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: மதுரையில் திமுகவின் அசுர பலம்! ஓபிஎஸ் முன்னிலையில் 50,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்!
"நான்குனேரி பகுதியில் நாடார், மறவர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர். ஆனால், வெளியிலிருந்து வரும் சில சக்திகள்தான் இத்தகைய பிரச்சனைகளைத் தூண்டி விடுகின்றனர்" என அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "விஜய்யின் அறிவிப்புகள் எக்காரணத்தைக் கொண்டும் திமுக தலைமையிலான தற்போதைய கூட்டணியைப் பாதிக்காது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தென் மாவட்டங்களில் நிலவும் சாதியப் மோதல்களைத் தடுக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனத் திருமாவளவன் இந்தச் சந்திப்பின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! மார்ச் 23-ம் தேதி இறுதி தீர்ப்பு!