விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பனையூர் பாபு, விசிக-விலிருந்து முற்றிலுமாக விலகுவதாக இன்று மாலை அறிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியில் இருந்து விலகுவது குறித்துத் தனது காரசாரமான அறிக்கையை வெளியிட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு, விசிக தலைவர் தொல். திருமாவளவனின் தற்போதைய அரசியல் உத்திகளைக் கடுமையாக விமரிசித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், "சமீப காலமாக விசிக தலைவர் திருமாவளவனின் அரசியல் செயல்பாடுகளும், அவர் எடுத்து வரும் முன்னுக்குப் பின் முரணான அரசியல் நிலைப்பாடுகளும் எனக்குள் மிகப்பெரிய வேதனையை அளித்து வருகின்றன. எந்த ஒரு கொள்கை முடிவிலும் தீர்க்கமான, உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல், அடிக்கடி தங்களது நிலைப்பாட்டை மாற்றி, ஒட்டுமொத்தக் கட்சியையும் ஒருவிதக் குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

விசிக-வின் தற்போதைய அரசியல் நகர்வுகளைத் தோலுரித்த பனையூர் பாபு, "தலைவர் திருமாவளவன் பொதுவெளியில் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருவது அரசியல் களத்திலும், இரவும் பகலும் கட்சிக்காக உழைத்த அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை விதைத்துள்ளது. எடுக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாமல், அடிக்கடி மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது.
இதையும் படிங்க: "பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார் ஆ.ராசா.. திமுக எம்பி-க்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

இதனால் விசிக-வின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் நான் முற்றிலுமாக விலகுகிறேன்" என்று தனது அறிக்கையில் பிரகடனம் செய்துள்ளார். விசிக-வின் மூத்த தலைவரான பனையூர் பாபு, தலைமையின் மீதான அதிருப்தியால் கட்சியை விட்டு வெளியேறியுள்ள இந்தச் சம்பவம், விசிக உயர்மட்டக் குழுவினர் மத்தியிலும், அரசியல் வட்டாரங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட சர்ச்சை பதிவு. பெரம்பலூரில் திமுக எம்பி ஆ.ராசா அலுவலகம் முற்றுகை!