பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு தேர்தல் காலங்களில் அடிக்கடி வருகை தருவது குறித்து எழும் விமர்சனங்கள் தமிழக அரசியலில் நீண்டகாலமாகத் தொடரும் ஒரு முக்கியமான விவாதப் பொருளாக உள்ளது. குறிப்பாக 2024 மக்களவைத் தேர்தலின்போதும், தற்போது 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலிலும் இந்த விமர்சனம் மிகவும் தீவிரமடைந்துள்ளது.
எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக தலைவர்களால் இது தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒரு முக்கிய குற்றச்சாட்டாக மாறியுள்ளது. இந்த விமர்சனத்தின் மையக் கருத்து, பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவது "தேர்தல் சீசன்" என்று அழைக்கப்படும் காலகட்டத்தில் மட்டுமே நடப்பதாகும். தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்போ, பிரசாரம் தொடங்கிய பின்னரோ அல்லது வாக்குப்பதிவு நெருங்கும் போதோ அவர் அடிக்கடி வருகை தருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், தேர்தல் இல்லாத சாதாரண காலங்களில் தமிழகத்தின் மீது அவருக்கு அவ்வளவு கவனம் இல்லை என்றும், மாநிலத்தின் நீண்டகாலக் கோரிக்கைகளைப் புறக்கணிப்பதாகவும் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருகை தருவது மற்றும் திட்டங்கள் நிறைவேற்றுவது அவர்களது வாக்கு வங்கியை அதிகரிக்குமா என்று திராவிட கழகத் தலைவர் கி. வீரமணியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை? திமுக ராஜீவ்காந்தி மீது புகார்..! வலுக்கும் கண்டனம்..!!
அதற்கு பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் என்பதுதான் தங்களின் ஆசை என்றும் அவர் தமிழ்நாட்டுக்கு வரவர தான் திமுகவுக்கு வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றும் தெரிவித்தார். தெரிந்தோ, தெரியாமலோ., புரிந்தோ, புரியாமலோ அவர் இதனை செய்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வருவது திமுகவின் வெற்றி கூட்டணிக்கு உரமாகும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: மீண்டும் ஊதிய உயர்வு... கவுரவ விரிவுரையாளர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்... அமைச்சர் கொடுத்த அப்டேட்..!