தமிழ்நாடு தலைமைச் செயலக வளாகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் விஜய் மதிய நேரத்தில் தலைமைச் செயலக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு ஏற்கெனவே காத்திருந்த உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர், அவர் பேட்டரி காரில் ஏறி, தலைமைச் செயலக வளாகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்வையிட்டார்.
அரசின் முக்கியத் துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை ஒவ்வொன்றாக நெருங்கிப் பார்த்த அவர், சில இடங்களில் காரை நிறுத்தி, கட்டிடங்களின் நிலை, பராமரிப்பு மற்றும் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். தலைமைச் செயலக வளாகத்தை முழுமையாக சுற்றிப் பார்த்த பின்னர், முதலமைச்சர் விஜய் அங்குள்ள பழமையான தேவாலயத்திற்கும் சென்றார்.

முதலமைச்சர் வருகையை முன்கூட்டியே அறிந்திருந்த தலைமைச் செயலக ஊழியர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாகக் கூடினர். விஜயை காண வேண்டும் என்பதற்காக அவர்கள் அங்கு குவிந்தனர். முதலமைச்சர் பேட்டரி காரில் செல்லும் போதெல்லாம் மக்கள் அவரை நெருங்க முயன்றனர்.
இதையும் படிங்க: அதிகாரத்தில் பங்கு... "சொன்னதை செய்தார் விஜய்"..! தவெக பெருமிதம்..!
பலர் தங்கள் செல்போன்களை உயர்த்திப் படம் எடுத்து, வீடியோ பதிவு செய்து மகிழ்ந்தனர். தமிழ்நாடு போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் பலத்த பாதுகாப்புப் படை வளாகம் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்தது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், மக்களின் உற்சாகத்தைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் அவ்வப்போது கையசைத்து மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெக அமைச்சரவை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு எம்பி கனிமொழி கண்டனம்!