விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகக் கூட்டணிக்குள் எவ்விதக் குழப்பத்தையும் எவராலும் ஏற்படுத்த முடியாது; முதல்வர் விஜய் விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை நம்பவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுவது, எங்களுக்குள் விரிசலை உண்டாக்க பாஜக பின்னணியில் இருந்து செய்யும் சதித் திட்டமே ஆகும் என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அவர்கள் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விமரிசையான நல்நோக்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, அதிக மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் நடப்புகள், கல்வித்துறை வழிகாட்டுதல்கள் மற்றும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகத் தனது கடுமையான வாதங்களைப் பதிவு செய்தார்.
அண்ணாமலை மற்றும் புதிய அமைப்புகள் குறித்துப் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் பாஜக முன்னெடுக்கும் வெறுப்பு மற்றும் மதவாத அரசியல் எடுபடாது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அதனால்தான், தங்களது கொள்கைகளை மறைமுகமாகத் திணிப்பதற்காக பாஜகவால் உருவாக்கப்பட்ட மற்றொரு பினாமி அமைப்புதான் 'வீ தீ லீடர்' (We The Leader) இயக்கம். கடந்த கால வரலாற்றில் குஜராத்தின் கேசுபாய் படேல், சங்கர்சிங் வகேலா மற்றும் உமா பாரதி போன்றவர்கள் தற்காலிகமாகப் பிரிந்து சென்று மீண்டும் பாஜகவிலேயே இணைந்தனர். அதேபோல் அண்ணாமலை போன்றவர்கள் எத்தனை மாறுவேடம் போட்டு வந்தாலும், அவர்களுக்குள் இருக்கும் 'பாஜக' என்ற கொண்டையை மறைக்க முடியாது. அவர் தனது ஐபிஎஸ் பதவியைத் துறந்து வரும்போதே, 'எனக்கு பின்னால் ஆர்எஸ்எஸ் இருக்கிறது' என்று ஒப்புக்கொண்டதை மக்கள் மறக்கவில்லை என்று சாடினார்.
இதையும் படிங்க: "நவீன கால கலிகுலா மன்னன் முதல்வர் விஜய்!" டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

தொடர்ந்து அதிமுகவின் தற்போதைய நிலவரம் குறித்துப் பேசிய அவர், பாஜகதான் அதிமுகவை அடியோடு அழித்துக் கொண்டிருக்கிறது என்பதை டிடிவி தினகரன் உணர வேண்டும். மாநில உரிமைகளுக்காகப் போராடிய ஒரு பேரியக்கம் இன்று வலிமையான தலைமை இல்லாமல் சிதையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஏன் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் தீய சக்தியான பாஜகவுடன் துணை போகாமல், அதிமுகவைச் சிதையாமல் பாதுகாக்க டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து முயல வேண்டும் என்றார். மேலும், தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் உரிய நேரத்தில் விவாதித்துத் தனது கருத்துக்களைப் பேசுவார் என்றும் குறிப்பிட்டார்.
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் அரசியல் கட்சியினர் நேரடியாக ஆய்வு செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஏதேனும் புகாரின் அடிப்படையில் அவர்கள் சென்றிருக்கலாம். ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஏற்கனவே 'அரசியல் கட்சியினர் பள்ளிகளில் நேரடியாக ஆய்வுகள் செய்யக் கூடாது' எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதே வழிகாட்டுதல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கும் முழுமையாகப் பொருந்தும். அரசு அதிகாரிகள் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்; விசிகவினர் உட்பட எந்தவொரு அரசியல் கட்சியினரும் இதில் தலையிடக் கூடாது, அமைச்சரின் இந்த வழிகாட்டுதலை நான் முழுமையாக வழிமொழிகிறேன் என்றார்.
இறுதியாக மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்த அவர், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல் திட்டங்களை மாநிலங்களில் வலுக்கட்டாயமாக அமல்படுத்தப் பார்க்கிறது. அதன் ஒரு வடிவம் தான் 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயமாக்கும் முயற்சி. நம் நாட்டிற்கு என்று பெருமைமிக்கத் தேசிய கீதம் இருக்கும்போது, வந்தே மாதரத்தை முன்னெடுப்பது தவறான முன்னுதாரணம். பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'ஆனந்த மடம்' நாவலில் உள்ள வந்தே மாதரம் பாடலில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வரிகள் இருப்பதாக அவரே குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட ஒரு பாடலைச் சட்டமாக்கிக் கட்டாயப்படுத்துவது, நமது நாட்டின் இறையாண்மையின் அடையாளமான தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது; இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று தனது பேட்டியை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: திமுக - தவெக ஒரே கூட்டணியில் இணைய வேண்டும்! கேரளாவை சுட்டிக்காட்டி திருமாவளவன் அதிரடி வியூகம்!