xசென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சி.ஜோசப் விஜய்க்கு முதலமைச்சர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். “விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன்” என ஆண்டவன் மீது ஆணையிட்டு விஜய் உறுதிமொழி ஏற்றார். தொண்டர்களின் விசில் சப்தமும் “டிவிகே டிவிகே” கோஷமும் அரங்கத்தை அதிரச் செய்தது.
நீலாங்கரை இல்லத்தில் இருந்து கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை மற்றும் கோட்சூட் அணிந்தபடி புறப்பட்ட விஜய், பலத்த பாதுகாப்புடன் அரங்கத்தைச் சென்றடைந்தார். வழியெங்கும் தொண்டர்கள் உற்சாக வாழ்த்துகளைத் தெரிவிக்க, காரில் இருந்தபடியே அவர் கை அசைத்து நன்றி தெரிவித்தார். அரங்கத்தில் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநரை மலர்கூடை கொடுத்து வரவேற்று, பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.
இதையும் படிங்க: Breaking News!! C.ஜோசப் விஜய் எனும் நான்!! ஆண்டவன் மீது ஆணை!! நேரு ஸ்டேடியத்தில் ஒலித்தது தமிழகமே எதிர்பார்த்த குரல்!!

விழாவில் ‘வந்தே மாதரம்’, தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்கள் ஒலித்தன. அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. நடிகராக புகழ் பெற்ற விஜய், அரசியலில் நுழைந்து விரைவில் மக்களின் அபிமானத்தைப் பெற்று முதல்வர் பதவிக்கு உயர்ந்துள்ளார்.
பதவியேற்புக்குப் பிறகு விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலில் என்.ஆனந்த் பதவியேற்றார். அதன்பின் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், சி.டி.ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு மற்றும் கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.

முக்கிய துறைப் பொறுப்புகள் உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளன. விஜய் பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறையை நேரடியாகக் கவனித்துக் கொள்கிறார். செங்கோட்டையன் பொதுப்பணித்துறை, என்.ஆனந்த் நகராட்சி நிர்வாகம், சி.டி.ஆர். நிர்மல்குமார் மின்சாரம், ஆதவ் அர்ஜுனா விளையாட்டு மற்றும் மது விலக்கு, ராஜ்மோகன் ஆதி திராவிடர் நலன், அருண்ராஜ் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரி, வெங்கடரமணன் பள்ளிக்கல்வி ஆகிய துறைகளைப் பொறுப்பேற்றுள்ளனர். சிறுபான்மை நலத்துறை உள்ளிட்ட மற்ற துறைகளும் விரைவில் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.
புதிய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலன் மற்றும் அனைத்துத் தரப்பினரின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படும் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகம் முழுவதும் கொண்டாட்ட சூழல் காணப்படுகிறது.
இதையும் படிங்க: கவர்னர் அர்லேகருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற விஜய்!! பொன்னாடை போர்த்தி மரியாதை!!