தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையையும், திமுகவின் தேர்தல் உத்திகளையும் அவர் கடுமையாகச் சாடினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து அண்ணாமலை பேசுகையில், "விஜய் கொடுத்திருக்கக்கூடிய மொத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற சுமார் 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால், தமிழகத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டே 4.50 லட்சம் கோடிதான். பட்ஜெட்டையே மிஞ்சும் அளவிற்கு விஜய்யின் வாக்குறுதிகள் இருப்பது சாத்தியமற்றது; இதையெல்லாம் மக்கள் சிந்தித்துப் பார்க்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் களம் குறித்துக் கருத்து தெரிவித்த அவர், "விஜய்க்கு மக்களிடம் ஈர்ப்பு இருக்கிறது, சில இடங்களில் அவர் நல்ல வாக்குகளைப் பெறலாம். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாகத் தமிழக அரசியல் களம் இருமுனைப் போட்டியாகவே மாறியிருக்கிறது. விஜய்யின் வருகையால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது" என்று கூறினார்.
இதையும் படிங்க: "சாதி, மதமற்றவர்" சான்று கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு: நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!
மத வழிபாட்டுத் தலங்களில் அரசியல் நுழைவதைக் குறித்துக் கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, "மதத்தைப் பின்பற்றக்கூடிய இடங்கள் பொதுவானதாக இருக்க வேண்டும். பாதிரியார் முதலமைச்சரைப் பார்ப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு வெளியே நின்று ஒரு வேட்பாளருக்கு எதிராக நோட்டீஸ் கொடுப்பது அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் தேர்தல் விதிகளுக்கு எதிரானது. தமிழக மக்கள் இதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, தஞ்சாவூர் கொண்டிராஜபாளையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை அண்ணாமலை பிரம்மாண்ட சாலை வலம் (Road Show) வந்து வாக்கு சேகரித்தார். தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்திற்கு ஆதரவாக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: "தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது!" - மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி!