மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் துன்புறுத்தல் புகார் வழக்கில் இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ்பூஷன் சிங் மற்றும் முன்னாள் இணைச் செயலாளர் வினோத் தோமர் ஆகியோரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 3) விடுவித்துள்ளது. கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் அஸ்வினி பன்வார், போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.
2023ஆம் ஆண்டு ஆறு முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ்பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். ஆறு முறை எம்.பி.யாக இருந்த பிரிஜ்பூஷன் மீது சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில் டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் மல்யுத்த சம்மேளனத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
2024இல் குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டைப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 15 அன்று டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். ஐபிசி பிரிவுகள் 354 (பெண்ணின் கண்ணியத்திற்கு ஊறுவிளைவிக்கும் நோக்கத்துடன் தாக்குதல்), 354ஏ (பாலியல் துன்புறுத்தல்), 354டி (பின்தொடர்தல் மற்றும் தொல்லை) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தவெகவில் சேர்ந்தவர்களுக்கு ஜாக்பாட்..! விஜயின் மாஸ்டர் மூவ்..! புதிய பதவிகள் அறிவிப்பு..!!

புகாரளித்தவர்களில் ஒருவர் மைனர் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவானது. ஆனால் அந்தச் சிறுமியின் தந்தை, பொய்யான புகார் அளிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, போலீசாரின் பரிந்துரையை ஏற்று நீதிமன்றம் போக்சோ பிரிவை ரத்து செய்தது. வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஜூலை 2இலிருந்து ஆகஸ்ட் 3க்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று நீதிமன்றம் இருவரையும் விடுவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தடை... தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!