சென்னை: மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அரசு அறிவித்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி இந்த திட்டத்தை நிறுத்தி வைத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் பொறுப்பேற்ற உடனேயே பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, பவானீஸ்வரி ஐ.ஜி. தலைமையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, இரண்டு துணை சூப்பிரண்டுகள், நான்கு இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட பெண் போலீசார் இந்தப் படையில் இணைக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு மிடுக்கான நேவி ப்ளூ அரைக்கை சட்டை, காக்கி பேண்ட், கருப்பு தொப்பி மற்றும் கருப்பு ஷூ கொண்ட புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதலில் மே 27-ம் தேதி ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் தொடக்க விழா நடைபெற இருந்தது. ஆனால் முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம் காரணமாக அது தள்ளிவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் வகித்த செயல் தலைவர் பதவி மீண்டும் வேணும்! திமுகவில் உதயநிதி, கனிமொழி தரப்பு போர்க்கொடி!

இதனைத் தொடர்ந்து மே 29-ம் தேதி (இன்று) விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வந்தன. எனினும், கடைசி நேரத்தில் தொடக்க விழா மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கேள்வி எழுப்பியுள்ளார். “கடலூரில் இளம்பெண் கொலை, தூத்துக்குடியில் இளைஞர் வெட்டிக்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் போது, மகளிர் பாதுகாப்புக்காக அறிவித்த சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள்? தமிழ்நாட்டில் அதிகரிக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு த.வெ.க. அரசு எப்போது தீர்வு காணப் போகிறது?” என வினவியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இரண்டு முறை தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. த.வெ.க. அரசு இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என அரசியல் வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.
இதையும் படிங்க: விடிந்ததுமே கொலைக் செய்தியா..! தவெக அரசை விளாசிய கனிமொழி..!