அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது. பாதுகாப்புக் கயிறை இணைக்க மறந்த ஊழியர்களின் அலட்சியத்தால், பஞ்சி ஜம்ப் (ரோப் ஜம்ப்) சாகசத்தில் ஈடுபட்ட 21 வயது இளம்பெண் மரியா எட்வார்டா ரோட்ரிக்ஸ் டி ஃப்ரீட்டாஸ் 35-40 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று சாவ் பாலோ மாநிலத்தின் லிமீரா நகரில் உள்ள ‘பொன்டே டு எஸ்கெலெட்டோ’ (Skeleton Bridge) எனும் பாலத்தில் நடைபெற்றது.
மரியா, உடற்கல்வி பட்டதாரியாக இருந்தவர். அவரும் அவரது நண்பர்களும் சாகச நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக ‘என்ட்ரே கார்டாஸ்’ (Entre Cordas) என்ற தனியார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த இடத்துக்கு வந்திருந்தனர். பொதுவாக, பங்கி ஜம்ப் அல்லது பெண்டுலம் ஜம்ப் என்று அழைக்கப்படும் இந்தச் செயல்பாட்டில் பங்கேற்பாளர்களுக்கு பாதுகாப்பு ஹார்னஸ் அணிவித்து, இறுக்கமான ரோப்பை இணைத்த பின்னரே ஜம்ப் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த முறை ஊழியர்கள் மரியாவுக்கு ரோப்பை இணைக்க மறந்துவிட்டனர். அவர் ‘சூப்பர்மேன்’ போஸில் தயாரானதும், ஊழியர்கள் அவரைத் தள்ளினர். ரோப் தரையில் சுருண்டு கிடக்க, மரியா கீழே விழுந்தார்.

சம்பவத்தைப் பார்த்த பார்வையாளர்கள் வீடியோ பதிவு செய்தனர். அந்த வீடியோவில், பெண் விழும் போது பார்வையாளர்கள் அலறும் ஒலி தெளிவாகக் கேட்கிறது. “ரோப் இல்லை! ரோப் இல்லை!” என்ற கூக்குரல்கள் வீடியோவில் பதிவாகியுள்ளன. அவர் தரையில் மோதியதும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பாக்.-ல் கோர சம்பவம்: பயங்கரமாக மோதிக்கொண்ட பேருந்துகள்.. 17 பேர் பரிதாப பலி..!!
சம்பவம் நடந்த உடனேயே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். ‘என்ட்ரே கார்டாஸ்’ நிறுவனத்துடன் தொடர்புடைய ஆறு பேரை கைது செய்து விசாரணை செய்தனர். சில அறிக்கைகளின்படி மூன்று பேருக்கு மான்ஸ்லாட்டர் (கொலை வழக்கு) குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதியினர் தப்பி ஓட முயன்றபோது ஹெலிகாப்டர் உதவியுடன் பிடிக்கப்பட்டனர். இந்தச் செயல்பாடு ஒழுங்கற்ற முறையில் நடத்தப்பட்டதா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்பும் இந்த இடத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் சாகச விளையாட்டு துறையில் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. மரியாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது கல்லூரி துக்கத்தில் மூழ்கியுள்ளன. இந்த அலட்சியத்தால் ஒரு இளம் உயிர் பறிபோனது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள், இத்தகைய செயல்பாடுகளுக்கு உரிய உரிமம் மற்றும் பாதுகாப்பு தர நிர்ணயங்களை கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உத்தர பிரதேசத்தில் கனமழைக்கு 31 பேர் உயிரிழப்பு! மீட்பு பணிகளை துரிதப்படுத்த அரசு உத்தரவு!