உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த விளையாட்டு நிகழ்வு என்ற பெருமையைப் பெற்றது உலகக் கோப்பை கால்பந்து தொடராகும். ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் இந்த மாபெரும் தொடர், வெறும் விளையாட்டு மட்டுமல்ல; உலக அரங்கில் நாடுகளுக்கிடையேயான ஒற்றுமை, போட்டி உணர்வு மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களை ஒன்றிணைக்கும் பிரம்மாண்டமான விழாவாகவும் திகழ்கிறது.
இந்நிலையில், 23வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஜூன் 11ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று வட அமெரிக்க நாடுகள் இணைந்து இந்த உலகக் கோப்பையை நடத்துகின்றன. இது வரலாற்றில் முதன்முறையாக மூன்று நாடுகள் இணைந்து ஒரு உலகக் கோப்பையை நடத்தும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்.
48 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் சுற்று, நாக் அவுட் சுற்று என பல்வேறு கட்டங்கள் நடைபெற உள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடர், பல ஸ்டேடியங்களில் நவீன வசதிகளுடன் நடைபெறுகிறது. இன்று (ஜூன் 14) லீக் சுற்றின் முக்கிய ஆட்டங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. முதலில் ஜெர்மனி - குராக்கோ அணிகள் மோதுகின்றன. ஜெர்மனி, உலகக் கோப்பை வரலாற்றில் பல முறை சாம்பியன் பட்டம் வென்ற அனுபவமிக்க அணி. அவர்களின் ஒழுங்கான ஆட்டம், வலுவான தற்காப்பு மற்றும் தாக்குதல் வரிசை எப்போதும் எதிரணியை அச்சுறுத்தும்.
இதையும் படிங்க: FIFA World Cup 2026: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..??

குராக்கோ அணியோ, கரீபியன் பிராந்தியத்தைச் சேர்ந்த சிறிய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாக இருந்தாலும், தங்களது வேகமான கால்பந்து மூலம் பெரிய அணிகளுக்கு சவால் விடும் திறன் கொண்டது. இந்த ஆட்டம் இன்று இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, நள்ளிரவு 1.30 மணிக்கு நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் இடையேயான பரபரப்பான மோதல் நடைபெற உள்ளது.
நெதர்லாந்து அணி, 'ஆரஞ்சு' படையென அழைக்கப்படும், தாக்குதல் கால்பந்துக்கு பெயர் பெற்றது. அவர்களது நட்சத்திர வீரர்களின் திறமை இந்த தொடரில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் அணியோ, ஒழுங்கு, வேகம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உலக அரங்கில் தன்னை நிலைநாட்டியுள்ளது. ஆசிய அணிகளில் முன்னணியில் இருக்கும் ஜப்பான், ஐரோப்பிய அணிகளுக்கு எதிராக அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறது.
இந்த இரு ஆட்டங்களும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை தொலைக்காட்சி முன் அமர வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொடரின் முன்னேற்றம், வீரர்களின் செயல்பாடு மற்றும் புள்ளி பட்டியல் ஆகியவை அடுத்த சில நாட்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது உறுதி. உலகக் கோப்பை ரசிகர்கள் இன்றைய ஆட்டங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!