ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். அறிமுகமான முதல் படத்திலேயே பெண்களின் கனவு நாயகனாக மாறினார். அதன்பின் ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் நண்பன் திரைப்படத்திலும் நடித்து கவனம் ஈர்த்தார். அதன் பின்பு சரியான படவாய்ப்பு கிடைக்காததால் குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் கேரக்டரில் மட்டுமே நடித்து வந்தார்.

இந்நிலையில் ஸ்ரீகாந்த் தற்போது போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபான விடுதியில் ஏற்பட்ட மோதல் வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத், அஜய் வாண்டையார் உட்பட ஒன்பது பேரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். பிரசாத் மீது பல மோசடி புகார்கள் குவிந்ததால் அந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். இவரது செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்தபோது கொகைன் போதை பொருள் கடத்தல் நபருடன் அவர் தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மதவாத பஞ்ச் இங்க வேண்டாம்... அப்புறம் சுடுதண்ணிய மூஞ்சில... பவன் கல்யானை எச்சரித்த ப்ளூ சட்டை மாறன்!!

அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சேலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரசாத்துக்கு போதை பொருள் விற்பனை செய்தது போல் பிரபல நடிகர் ஸ்ரீகாந்துக்கும் கொக்கைனை கொடுத்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார் பிரதீப்.
இதை அடுத்து நடிகர் ஸ்ரீகாந்தை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அழைத்து வந்து சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் தீவிர விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் சோதனை செய்ததில் போதைப் பொருள் எதுவும் சிக்கவில்லை. இதை அடுத்து அவருக்கு சம்மன் கொடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் ஸ்ரீகாந்துக்காக பலமுறை பிரதீப்குமார், பிரசாத் மூலம் கொக்கைன் சப்ளை செய்துள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் பிரசாத் ஏற்பாடு செய்த பார்ட்டிக்கு பிரதீப் கொக்கைன் போதை பொருளை சப்ளை செய்துள்ளார். அதில் ஸ்ரீகாந்துடன் மற்றொரு நடிகரும் கொக்கைன் பயன்படுத்தியதாக கைதான பிரதீப் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அந்த நடிகரையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி மேலும் பல நடிகர், நடிகைகளுக்கு போதை பொருள் சப்ளை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் இந்த வழக்கில் இன்னும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்திற்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சென்னை 14வது பெருநகர நீதிமன்ற நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஸ்ரீகாந்த் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று அவரை முதல் வகுப்பு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கோலிவுட்டில் தீவிரமாக நடந்த கொகைகன் சப்ளை.. ஸ்ரீகாந்திற்கு அடுத்ததாக மாட்டப்போகும் முக்கிய நடிகர்..!