பிக் பாஸ் தெலுங்கு சீசன் 6 மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீ சத்யா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு டாக் ஷோவில் தனது வாழ்க்கையின் மிகவும் கசப்பான, மனதை உலுக்கும் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். சாதாரண வீட்டுக் குழந்தையாக தொடங்கி, சீரியல் நடிகையாய் மெல்ல மெல்ல முன்னேறிய ஸ்ரீ சத்யா, பிக் பாஸ் மேடையின் மூலம் பிரபலத்தின் உச்சிக்குச் சென்றவர். அழகு, பேச்சு மற்றும் நேர்மையான நடத்தை மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு வலுவான இடத்தை அவர் உருவாக்கியிருந்தாலும், அந்த நகைச்சுவை முகத்தின் பின்னால் இவ்வளவு வலி இருந்தது என்பதை அவரது பேட்டி வெளிப்படுத்துகிறது.
ஸ்ரீ சத்யா இந்த டாக் ஷோவில் கலந்து கொண்டபோது, தனது குழந்தைப் பருவத்திலும் திரைத்துறையிலும் சந்தித்த பாலியல் தொந்தரவு, தாக்குதல், மற்றும் தனிமை போன்றவற்றைப் பற்றி விரிவாக கூறினார். பல ஆண்டுகளாக மனதில் புதைந்து இருந்த இந்த அனுபவங்களை அவர் மிகுந்த தைரியத்துடன் பகிர்ந்தது, ரசிகர்களை மட்டுமல்ல, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

"என் வாழ்க்கையில் திரைத்துறைக்கு வந்த பிறகே மட்டும் அல்ல, அதற்கு முன்பே பல கஷ்டங்களை சந்தித்துள்ளேன்," என்று கூறிய அவர், தொடர்ந்து, “இன்றும் கூட எனக்கு தவறான தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வருகின்றன. ஆனால் அதில் எவரும் நேரடியாக சமூக தர்மத்தின் முன் வந்து பேசத் தயங்குகிறார்கள்.”
என்று மன வேதனையுடன் பகிர்ந்தார்.
இதையும் படிங்க: இளையராஜா–சோனி காப்புரிமை மோதல்..! வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்..!
அவர் குறிப்பிட்ட மிக வேதனையான சம்பவம், தன் குழந்தைப் பருவத்தைச் சார்ந்தது. “7-ம் வகுப்பு படிக்கும்போது கூட ஒரு மோசமான சம்பவம் நடந்தது. அது என்னை மனதளவில் மிகப் பெரிய அளவில் பாதித்தது. என்னைச் சுற்றி மக்கள் இருந்தார்கள். ஆனால் யாரும் உதவவில்லை. அந்த ஒரு தருணம் என்னை வாழ்நாள் முழுவதும் மாற்றிவிட்டது.” என்று கூறியபோது, அவர் குரல் நடுங்கியதாக நிகழ்ச்சியில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.

பெண்களின் உடை குறித்து குற்றச்சாட்டுகள் முன்வைப்பவர்கள் மீது அவர் கடும் அதிருப்தி தெரிவித்தார்.
“ஒரு சிறிய பெண் என்ன மாதிரி உடை அணிவாள்? அப்படியிருக்க அவர்களை ஏன் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறார்கள்? பிரச்சனை உடையில் இல்லை; பிரச்சனை அதை தவறாகப் பார்க்கும் மனிதர்களில் தான்,”
என்று அவர் வலியுறுத்தினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஸ்ரீ சத்யா பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தாலும், இந்தப் பேட்டி போன்ற வெளிப்படையான உண்மைகளை அவர் இதுவரை பகிரவில்லை. இந்த பேட்டி வெளியான சில மணி நேரங்களுக்குள் சமூக வலைதளங்களில் வைரலானது. ரசிகர்கள், நெட்டிசன்கள் மட்டுமல்லாமல் பலர் அவரது தைரியத்தை பாராட்டி, ஆதரவை தெரிவித்து வருகின்றனர். பலரும், “இத்தகைய சம்பவங்களை தைரியமாக வெளிப்படுத்துவது மற்ற பெண்களுக்கு ஒரு ஊக்கமாகும்,” என்று கருத்துரைத்துள்ளனர்.

ஸ்ரீ சத்யாவின் இந்த உணர்ச்சிமிகு வெளிப்படுத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் தொந்தரவு மற்றும் சமூகத்தில் நிலவும் தவறான மனப்பாங்குகள் குறித்து புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. அவரது குரல் மேலும் பலருக்குத் தைரியம் தரும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: கோவிலில் வெடித்த சர்ச்சை..! சேலையில் கவர்ச்சியாக வந்த நடிகை.. முடிவு கட்டிய அண்ணா ராஜன்..!