தமிழ் சினிமாவின் வரலாற்றில் தனித்துவமான அத்தியாயத்தை எழுதிய இயக்குநர் பாரதிராஜா இன்று காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நீண்டகாலமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், தனது 84-வது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி வெளியாகிய உடனேயே தமிழ் திரையுலகம் மட்டுமின்றி அரசியல், இலக்கியம் மற்றும் சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். கிராமத்து வாழ்க்கையின் இயல்பான அழகையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் வெள்ளித்திரையில் உயிரோட்டத்துடன் பதிவு செய்த கலைஞரை இழந்த துயரத்தில் தமிழ் மக்கள் உள்ளனர்.
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் 1941-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி பெரியமாயத்தேவர் – கருத்தம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் பாரதிராஜா. சின்னச்சாமி என்பது அவரது இயற்பெயர். சிறுவயதிலிருந்தே இலக்கியம், மேடை நாடகங்கள் மற்றும் பேச்சுப் போட்டிகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த அவர், கலை உலகின் மீது தனித்துவமான ஈர்ப்பை வளர்த்துக் கொண்டார். தனது சொந்த ஊரில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றியபோதும், சினிமா குறித்த கனவு அவரை விடவில்லை. அந்தக் கனவை நனவாக்கும் நோக்கில் அவர் சென்னை நோக்கிப் பயணமானார்.
திரைத்துறையில் வாய்ப்பு பெறுவது எளிதானதாக இருக்கவில்லை. வாழ்க்கையின் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட அவர், மேடை நாடகங்களில் நடித்ததுடன், பெட்ரோல் பங்க்கில் பணியாற்றுதல் உள்ளிட்ட பல வேலைகளையும் செய்து வந்தார். ஆனால் சினிமாவை நோக்கிய அவரது முயற்சி ஒருபோதும் தளரவில்லை. அந்த விடாமுயற்சியே பின்னர் அவருக்கு இயக்குநர் பி. புல்லையாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த அனுபவம் அவரது திரைப்படப் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்தது.
இதையும் படிங்க: திடீர் உடல்நலக்குறைவு... பாரதிராஜாவின் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?... அருகில் இல்லாத மனைவி, மகள்...!

1977-ம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவில் ஒரு புதிய புரட்சியை உருவாக்கினார். அந்நாள்வரை பெரும்பாலும் ஸ்டூடியோவுக்குள் கட்டுப்பட்டிருந்த தமிழ் திரைப்படங்களை கிராமங்களின் மண் வாசனை மிக்க இயற்கை சூழலுக்கு அழைத்து சென்றார். உண்மையான கிராமங்களை படப்பிடிப்பு தளங்களாக மாற்றிய அவர், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கினார். ‘16 வயதினிலே’ திரைப்படம் அவரது வாழ்க்கையில் மட்டுமல்ல, நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் திரைப்பயணத்திலும் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
பாரதிராஜாவின் படைப்புகளில் கிராமத்து மக்களின் வாழ்க்கை, காதல், குடும்ப உறவுகள், சமூக ஏற்றத் தாழ்வுகள் மற்றும் மனித உணர்வுகள் மிக இயல்பாக வெளிப்பட்டன. கதாபாத்திரங்கள் செயற்கையாக இல்லாமல், நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களைப் போன்ற உணர்வை ஏற்படுத்தின. இதுவே அவரது திரைப்படங்களை காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கச் செய்தது.
‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘காதலோரக் கவிதைகள்’, ‘மண்ண்வாசனை’, ‘வேதம் புதிது’, ‘கருத்தம்மா’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் அவரது இயக்கத் திறனுக்குச் சான்றாக திகழ்கின்றன. ஒவ்வொரு படைப்பிலும் புதிய கருத்துகளையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்திய அவர், வெறும் பொழுதுபோக்கு இயக்குநராக மட்டுமல்லாமல் சிந்திக்க வைக்கும் படைப்பாளியாகவும் திகழ்ந்தார்.
இயக்குநராக மட்டுமல்லாமல், பல திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் பாரதிராஜாவுக்கு உண்டு. பல புதிய முகங்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதால், தமிழ் திரைப்பட உலகின் முக்கியமான திறமையாளர்களில் பலர் அவரது பள்ளியில் உருவானவர்கள் என்று கூறப்படுகின்றனர். இதனால் அவர் ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு கலைப் பள்ளியாகவும் பார்க்கப்பட்டார்.

திரைப்படத்துறைக்கான அவரது பங்களிப்பை பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தனது படைப்புகளுக்காக ஆறு தேசிய விருதுகளை வென்ற அவர், இந்திய அரசின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் 2004-ஆம் ஆண்டு பெற்றார். பல மாநில மற்றும் திரைப்பட விருதுகளும் அவரது சாதனைகளை கௌரவித்துள்ளன.
இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் பாரதிராஜா தனித்துவமான இடத்தைப் பெற்றார். ‘ஆயுத எழுத்து’, ‘பாண்டிய நாடு’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘ராக்கி’, ‘ஈஸ்வரன்’, ‘மீண்டும் ஒரு மரியாதை’, ‘அன்னக்கொடி’, ‘ரெட்ட சுழி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அனுபவம் மிக்க மூத்த கதாபாத்திரங்களில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. கடந்த 2025-ஆம் ஆண்டு வெளியான ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.
“என் இனிய தமிழ் மக்களே, நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்...” என்ற வார்த்தைகளுடன் தனது உரைகளைத் தொடங்குவது அவரது அடையாளமாக இருந்தது. அந்த குரல் இன்று மவுனமாகியிருந்தாலும், அவர் உருவாக்கிய கதைகளும் கதாபாத்திரங்களும் ரசிகர்களின் நினைவில் என்றும் வாழும்.
பாரதிராஜாவின் மறைவு செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளவிட முடியாதது என்றும், அவரது படைப்புகள் வருங்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

கிராமத்து வாழ்க்கையின் அழகையும் மனித உறவுகளின் ஆழத்தையும் உலக அரங்கில் அறிமுகப்படுத்திய அந்த மகத்தான கலைஞருக்கு தமிழ் திரையுலகம் இன்று கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறது. மனிதர்கள் மறையலாம்; ஆனால் அவர்கள் உருவாக்கிய கலை மரபு என்றும் அழியாது என்பதற்கு பாரதிராஜாவின் வாழ்க்கையே மிகப்பெரிய சான்று. மறைந்தாலும் மறையாத பெயராக, தமிழ் சினிமாவின் வரலாற்றில் பாரதிராஜா என்ற பெயர் என்றும் நிலைத்திருக்கும். அவரது படைப்புகள் தொடர்ந்து பேசும் வரை, அந்த மண்வாசனை மன்னன் தமிழ் மக்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டே இருப்பார்.
இதையும் படிங்க: என் இனிய தமிழ் மக்களே...!! - மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!