நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவருமான விஜய்க்கு எதிராக வருமான வரித் துறை விதித்த அபராத உத்தரவை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் தற்போது இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீடு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
2015-16ம் நிதியாண்டில் நடிகர் விஜய் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில், அவரது மொத்த வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், வருமான வரித் துறை 2015ம் ஆண்டு அவரது இல்லத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்தபோது, ‘புலி’ திரைப்படத்துக்காக அவர் பெற்ற 15 கோடி ரூபாய் வருமானம் கணக்கில் காட்டப்படவில்லை என்பதை கண்டறிந்தது.

இந்த வருமானத்தை மறைத்ததாகக் கூறி, வருமான வரித் துறை 2022 ஜூன் 30 அன்று விஜய்க்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, விஜய் தரப்பில் முக்கிய வாதம் முன்வைக்கப்பட்டது. சட்டப்படி அபராத உத்தரவு 2019 ஜூன் 30க்குள் பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஜனநாயகன் படம் லீக்..!! குற்றவியல் நடவடிக்கை தான்..! படக்குழு எச்சரிக்கை..!!
ஆனால், ஆறு ஆண்டுகள் தாமதமாக 2022ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அது செல்லாது என்று வாதிடப்பட்டது. எனினும், வருமான வரித் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அபராத உத்தரவு அப்பீல் முடிந்த பிறகு ஆறு மாதங்களுக்குள் பிறப்பிக்கப்பட்டதாகவும், சட்டத்தின்படி இது சரியானதே என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, “அபராத உத்தரவு உரிய கால அவகாசத்துக்குள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. எனவே நீதிமன்றம் தலையிட எந்த அவசியமும் இல்லை” என்று கூறி, விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார். அப்போது விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரப்பட்டது. நீதிபதி அதை ஏற்றுக்கொண்டு, அபராத உத்தரவை எதிர்த்து வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்தார்.

ஆனால், “உத்தரவு தாமதமாக பிறப்பிக்கப்பட்டது” என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்றும், மற்ற காரணங்களைக் கொண்டு மட்டுமே மேல்முறையீடு செய்யலாம் என்றும் உத்தரவிட்டார். இந்த நிலையில், தனி நீதிபதியின் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தாராளமாக கிளாமரை காட்டி இளசுகளை சொக்க வைத்த ராகுல் ப்ரீத் சிங்..! வைரலாகும் கிளிக்ஸ்..!