புரட்டாசி மாதம் இந்து பக்தர்களுக்கு விசேஷமான காலம். இந்த மாதத்தில் நாராயணனின் நாமம் எங்கும் ஒலிக்கும். பூலோக வைகுண்டமான திருமலையில் ஸ்ரீ வெங்கடாசலபதி கலியுக வரதனாக அவதரித்தது இம்மாதத்தில்தான் என்பது ஐதீகம். குடும்ப அமைதி, நீண்ட ஆயுள், செல்வம் ஆகியவற்றை அள்ளித்தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது.
கன்னி ராசி பெருமாளின் அம்சமாகக் கருதப்படுகிறது. புதன் கிரகத்தின் வீடான கன்னியில் சூரியன் அமர்வது புரட்டாசியில் தான். புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான் என்பதால் இம்மாத சனிக்கிழமைகள் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. வருடம் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருக்க முடியாதவர்கள், புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் மட்டும் விரதமிருந்து பெருமாளை வழிபட்டாலே போதுமான பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
விரத நாளில் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து, சனிபகவானுக்கு நல்லெண்ணெயில் எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பின்னர் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்வது நல்லது. சிலர் திருப்பதிக்குச் சென்று காணிக்கை செலுத்துகின்றனர். சிவாலயங்களில் சனிபகவானை வணங்கினால் சனி தோஷம் நீங்கும். காகத்திற்கு ஆலம் இலையில் எள்-வெல்லம் கலந்த அன்னம் வைப்பதும் பழக்கம். அன்று கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.
இதையும் படிங்க: நாளை பிறக்கும் புரட்டாசி மாத சிறப்பு: பெருமாள் அருளும், ஒருநாள் கோயில் சுற்றுலாவும்!!

தர்மம் செய்வது மிகவும் நல்லது. சனி-புதன் திசை நடப்பவர்கள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட்டால் தடைகள் நீங்கி புண்ணியம் பெருகும்.புராணக் கதைகளின்படி, சனிபகவான் கலியுகப் பயணத்தின்போது நாரதர் “திருமலைக்குச் செல்லாதே” என எச்சரித்தார். ஆனால் சனி அங்கு கால் வைத்தவுடன் திருமலை வேங்கடவனால் தூக்கி வீசப்பட்டார்.
மன்னிப்புக் கேட்ட சனிபகவானிடம், திருமலை பக்தர்களைத் துன்புறுத்தக் கூடாது என விஷ்ணு கட்டளையிட்டார். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு முழு அருள் கிடைக்கும் என வரமும் அளித்தார். மற்றொரு கதையில், பாவ கிரகம் என ஒதுக்கப்பட்ட சனி தவம் செய்தபோது, விஷ்ணு “புரட்டாசி சனியில் அதிக பக்தர்கள் உன்னை வழிபடுவார்கள்; அவர்களின் விருப்பங்களை நிறைவேற்று” என வாக்களித்ததாகச் சொல்லப்படுகிறது.
பாண்டவர்கள் வனவாசத்தின்போது தவறாமல் புரட்டாசி சனி விரதமிருந்து பெருமாளை வழிபட்டதால் போரில் வென்று நாடும் செல்வமும் திரும்பப் பெற்றனர் என புராணங்கள் கூறுகின்றன. சூரியனின் இச்சா சக்தியான உஷாதேவியிடம் சனீஸ்வரன் தோன்றியதாகவும் குறிப்புகள் உள்ளன. இந்த விரதம் கஷ்டங்களை நீக்கி வளமான வாழ்வைத் தரும் என்பது மரபு நம்பிக்கை. புரட்டாசி முதல் சனிக்கிழமையில் விரதமிருந்து பெருமாளின் அருளைப் பெறுவோம்.
இதையும் படிங்க: நாளை பிறக்கும் புரட்டாசி மாத சிறப்பு: பெருமாள் அருளும், ஒருநாள் கோயில் சுற்றுலாவும்!!