கோவை: கோவையில் கடந்த மூன்று மாதங்களில் சிறுவர்கள் குற்றம்சாட்டப்பட்ட நான்கு கொலை வழக்குகள், சிறார் நீதிக்குழுமத்தின் ஆய்வுக்குப் பிறகு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்ட சிறுவர்களின் வயது மட்டுமின்றி, அவர்களின் மனமுதிர்ச்சி, உடல் மற்றும் மனநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறார் நீதிக்குழுமம் தெரிவித்துள்ளது.
சிறார் குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதைவிட, அவர்களை நல்வழிப்படுத்தி கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதுகாப்பதே சிறார் நீதிமுறையின் முக்கிய நோக்கமாக உள்ளது. இருப்பினும், கொலை போன்ற கொடூரமான குற்றச்சாட்டுகள் எழும் வழக்குகளில் சிறுவர்களின் மனநிலை மற்றும் குற்றத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்படுகின்றன.
அந்த வகையில் கோவையில் நான்கு வழக்குகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கடந்த ஜூலை 30-ம் தேதி சிங்காநல்லூரில் தனது மகனை கண்டித்ததாக கூறப்படும் பெயிண்டர் மணிகண்டன் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் 17 வயது சிறுவன் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஊட்டி பஸ் ஸ்டாண்டில் ‘கஞ்சா சாக்லேட்’ விற்ற வடமாநில வாலிபர் கைது! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

ஆகஸ்ட் 6-ம் தேதி கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் 16 வயது சிறுவன் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார். கொலைக்ப் பிற கத்தியுடன் புகைப்படம் எடுத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியிருந்தது.
ஆகஸ்ட் 10-ம் தேதி மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் குற்றம்சாட்டப்பட்டார். இதேபோல், ஆகஸ்ட் 12-ம் தேதி பாப்பநாயக்கன்பாளையத்தில் 58 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிலும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நான்கு வழக்குகளிலும் சிறார் நீதிக்குழுமம் குற்றச்சாட்டுகளின் தன்மை, சிறுவர்களின் மனமுதிர்ச்சி, குற்றத்தின் விளைவுகளை புரிந்துகொள்ளும் திறன், உடல் மற்றும் மன வளர்ச்சி, மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்தது. பின்னர் வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைக்காக கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
சிறார் நீதிக்குழுமத்தின் வழக்கமான விசாரணையில் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை தண்டனை வழங்கும் வாய்ப்பு உள்ள நிலையில், சிறப்பு நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்ட விதிகளின்படி அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டெம்போவில் நடந்த கொடூரம்! கத்தியால் குத்தி கொலை!