தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் ஜாகிராபாத்தைச் சேர்ந்த சித்தாரெட்டி (35) என்ற இளைஞர் பானிபூரி வியாபாரம் செய்து வந்தார். அவரது மனைவி கவிதா (29) தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இவர்களுக்கு 9 வயது மகளும், 6 வயது மகனும் உள்ளனர். குடும்ப வாழ்க்கை சுமுகமாக இருந்த நிலையில், திடீரென ஒரு சம்பவம் அனைத்தையும் தலைகீழாக மாற்றியது.
கவிதாவுக்கு திருப்பதியை அடுத்த சந்திரகிரி பகுதியைச் சேர்ந்த பவன்குமார் ரெட்டி (32) என்றவருடன் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து கவிதா, கணவரையும் இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் செல்ல முடிவு செய்தார். கடந்த மாதம் 27-ம் தேதி அவர் ஜட்செர்லாவில் தங்கியிருந்த பவன்குமார் ரெட்டியிடம் சென்றுவிட்டார்.
மனைவியை காணவில்லை என சித்தாரெட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி கவிதாவை ஜட்செர்லாவில் கண்டுபிடித்தனர். மனைவியை அழைத்து வர சித்தாரெட்டி, போலீஸ்காரர் காதிர் உடன் காரில் ஜட்செர்லா சென்றார். அங்கு கவிதா மற்றும் பவன்குமார் ரெட்டியிடம் போலீஸ்காரர் அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: ”எங்கள புயலா மாத்தி விட்றாதீங்க..” - மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்...!

கணவருடன் செல்லும்படி கூறினார். ஆனால் கவிதா, “கள்ளக்காதலனை விட்டு வர முடியாது” எனக் கூறி கணவரை கடுமையாக திட்டினார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ்காரர் இருவரையும் சமாதானப்படுத்தினார்.
பின்னர் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கவிதா ஜாகிராபாத்துக்கு வர சம்மதித்தார். காரின் முன் இருக்கையில் போலீஸ்காரரும், பின் இருக்கையில் கவிதா, சித்தாரெட்டி, பவன்குமார் ரெட்டி ஆகியோரும் அமர்ந்தனர். சதாசிவபேட்டை அருகே டீக்கடையில் கார் நிறுத்தப்பட்டது. அப்போது சித்தாரெட்டி கடைக்குச் சென்று ஒரு கத்தியை வாங்கி மறைத்து வைத்துக் கொண்டார்.
டீ குடித்துவிட்டு கார் புறப்பட்ட பிறகு, மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த சித்தாரெட்டி திடீரென கத்தியை எடுத்து கவிதாவின் கழுத்தில் சரமாரியாகக் குத்தினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸ்காரர் உடனடியாக கத்தியை பிடுங்கினார். ஆனால் அப்போதே கவிதாவின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் டாக்டர்கள் அவரை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து சித்தாரெட்டியை கைது செய்தனர். இரு சிறு குழந்தைகள் தாயை இழந்து தவிப்பதும், ஒரு குடும்பம் சிதைந்து போனதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் கள்ளக்காதல் ஒரு குடும்பத்தையே அழித்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மேற்காசிய போரால் முடங்கிய தொழில்கள்..!! ரூ.2.50 லட்சம் கோடி கடன்..!! மத்திய அரசு முடிவால் நிம்மதி..??