நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, விலைவாசி உயர்வு, வெளிநாட்டு கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் தயாராகியுள்ளன. இதனால் இந்த கூட்டத்தொடர் கடும் அரசியல் மோதலுக்கு மேடையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு வருமான வரி சட்டத் திருத்த மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா, 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்தம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த உள்ளது.
மேலும், கடந்த சிறப்பு கூட்டத்தில் நிறைவேறாமல் போன 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மசோதா குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் வேறுபட்ட கருத்துகளை முன்வைத்துள்ளதால், இதுவும் முக்கிய விவாதமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நாளை அனைத்துக்கட்சி கூட்டம், மறுநாள் கூடுகிறது நாடாளுமன்றம்! நீட் முதல் ராமர் கோவில் வரை எதிர்க்கட்சிகள் அதிரடி திட்டம்!

இதற்கிடையில், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் சிவசேனை (உத்தவ்) கட்சிகளில் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக மக்களவையில் அரசியல் சமன்பாடுகள் மாறியுள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி முறிவு உள்ளிட்ட சமீபத்திய அரசியல் மாற்றங்களும் இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றன.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்ற சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்க ஆளும் தரப்பும் தயாராகியுள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பான விவாதங்கள் நடைபெறும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இதையும் படிங்க: பார்லி., மழைக்காலத் தொடர்! ஜூலை 19-ல் அனைத்துக் கட்சி கூட்டம்... மத்திய அரசு அழைப்பு!