சென்னை: பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், சென்னை மாநகர போலீசாரால் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது தோழி மாலதியும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சங்கர் தற்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி, ஆலந்தூர் மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட பண மோசடி வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் மருத்துவ காரணங்களை முன்வைத்து அவரது தாயார் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. ஜாமினில் வெளியே வந்த சங்கர், நீதிமன்ற உத்தரவுகளை மீறி யூடியூப் சேனலில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு தி.மு.க. அரசு மற்றும் அதிகாரிகளை விமர்சித்து வந்தார்.
இதையும் படிங்க: ஆந்திரா, தெலுங்கானாவில் தலையெடுக்கும் போதை கலாசாரம்!! திணறும் ஆட்சியாளர்கள்! முதல்வர்கள் தீவிர ஆலோசனை!

இதனால் ஜாமினை ரத்து செய்யக் கோரி சென்னை மாநகர போலீசார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம், ஜாமின் நிபந்தனைகளை மீறினால் சங்கரை கைது செய்யலாம் என்று உத்தரவிட்டது. ஆனாலும் சங்கர் தலைமறைவாக இருந்து வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதையடுத்து அவரை தலைமறைவு குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர்.
சமீபத்தில் சங்கர், போலீசாருக்கு சவால் விடும் வகையில் “முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” என்று பேசியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை போலீஸ் தனிப்படை ஆந்திராவுக்குச் சென்று அவரை விடுதியில் வைத்து கைது செய்தது. இந்த சம்பவம் தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுக்கு சங்கரின் இந்த இரண்டாவது கைது, அவரது யூடியூப் பதிவுகள் மற்றும் ஜாமின் நிபந்தனை மீறல் தொடர்பான வழக்குகளுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!