திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் வசிக்கும் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர், தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த 15 வயது மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில், திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தக் கொடூர சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் தந்தை தனது சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வள்ளியூர் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கருவில் உருவான குழந்தையின் டிஎன்ஏவும் குற்றம் சாட்டப்பட்ட தந்தையின் டிஎன்ஏவும் ஒத்துப்போனது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.
இதையும் படிங்க: 7 வயது சிறுமி வன்கொடுமை! நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்!! நயினார் ஆவேசம்!!
இந்த வழக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி சுரேஷ்குமார் இன்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் அவர், "குறைந்தபட்ச தண்டனை வழங்க நினைத்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தையும் அவரது தாயும் உச்சபட்ச தண்டனை கோரியுள்ளனர்.

சொந்த மகளையே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த இந்தக் கொடூர குற்றத்துக்கு இந்த நீதிமன்றம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கிறது" என்று தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்க வகையில், கடந்த 11 நாட்களுக்கு முன்பே இதே போக்சோ நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கில் மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக இதே நீதிமன்றம் இதுபோன்ற கொடூர குற்றத்துக்கு மரண தண்டனை விதித்துள்ளது சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் சமூகத்தில் உள்ள கொடூர குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோரும் சமூகமும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
இதையும் படிங்க: சிறுமிகளுக்கு சிறுவர்கள் பாலியல் தொல்லை! வளர்ப்பு சரியில்லை எனக்கூறி சிறுவர்களின் தாய்மார்கள் கைது!