சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர், 4 மாதம் முன்பு பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தன்னுடன் தகராறு செய்வதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தார்.
அப்போது இரவுப் பணியிலிருந்த விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கண்ணன், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, பிரச்னையை தீர்த்து வைத்தார். அதன் பிறகு இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு அந்த இளம் பெண் வாட்ஸ் அப் மூலம் நன்றி தெரிவித்தார்.
இதனை பயன்படுத்திக் கொள்ள நினைத்த இன்ஸ்பெக்டர் கண்ணன், தனது காதல் வலையை வீச ஆரம்பித்துள்ளர். தினமும் இளம் பெண்ணுக்கு காலையில் குட் மார்னிங் முதல் இரவு குட் நைட் வரை வரிசை கட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவ்வப்போது போன் செய்து அன்பு மழையையும் பெய்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் தெருத்தெருவாக காரில் சுற்றிய ராமதாஸ்.. அமித்ஷாவுக்கே அல்வா..!

கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் அதிகரிக்க, ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர் கண்ணன், தனக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்றும். இப்போ தனியாகத்தான் இருக்கிறேன். உனக்கு விருப்பம் என்றால் நாம் திருமணம் செய்துகொள்ளலாம் எனவும் நங்கூரத்தை போட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டரின் வசீகர பேச்சில் அந்தப் பெண் மயங்கிய அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து ஒன்றாக இருந்து வந்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் கண்ணன், காரியத்தில் மட்டும் கண்ணாய் இருப்பதையும் கல்யாணம் குறித்த பேச்சையே எடுக்காததையும் கவனித்த இளம்பெண், அடிக்கடி ஒன்றாக இருக்கும் போது, தன்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் இன்ஸ்பெக்டர் அந்த இளம் பெண்ணின் தொடர்பை துண்டித்து வந்துள்ளார்.

இந்த விஷயம் இன்ஸ்பெக்டர் கண்ணனின் மனைவிக்கு தெரியவரவே விஷயம் விஸ்வரூபமானது. ஏமாற்றத்தை பொறுக்காத இன்ஸ்பெக்டர் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இன்ஸ்பெக்டர் இளம் பெண்ணிடம் எனக்கு விவாகரத்து ஆகவில்லை.
தற்போதும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தான் ஒன்றாக வசிக்கிறேன். எனவே நீ என்னை தொந்தரவு செய்யாதே என கெஞ்சி உள்ளார். அதற்கு இளம் பெண் மறுப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளார். இதனால் இன்ஸ்பெக்டர் இளம் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்ஸ்பெக்டருக்கு பயந்து விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு மயிலாப்பூருக்கு குடியேறினர்.
ஆனாலும் இன்ஸ்பெக்டர் தன்னுடன் ஒன்றாக இருந்த நாட்களை நினைத்து ஏங்கிய இளம்பெண், அவர் மீதான காதலை கைவிட முடியாமல் தவித்துள்ளார். இன்ஸ்பெக்டரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இன்ஸ்பெக்டருக்கு கார் ஓட்டும் காவலர்களையும் தொடர்பு கொண்டு எந்த பயனும் இல்லை.

இதனால் இளம் பெண் ராமாபுரம் காவல் நிலையத்திற்கு போன் செய்து, விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தன்னை திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார்.
ஆனால் காவல் நிலையத்தில் இளம் பெண் மீதான புகாருக்கு சரியாக பதில் அளிக்காமல் இணைப்பை துண்டித்து விட்டனர். ஒருகட்டத்தில் இளம் பெண் சம்பவம் குறித்தும், சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தியிடம் புகைப்படங்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்களுடன் புகார் அளித்தார்.
அதன்படி இணை கமிஷனர் விசாரணை நடத்தும் வகையில் இன்ஸ்பெக்டரை நேரில் அழைத்துள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகாமல் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இருந்தாலும் இணை கமிஷனர் இன்ஸ்பெக்டரை விசாரணை முடியும் வரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

பின்னர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு இணை கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி உயர் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் மற்றும் இளம் பெண் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக இருந்து இன்ஸ்பெக்டர் ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக அவரது மனைவியும் தற்கொலை முயற்சி செய்த சம்பவமும் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு வந்தது.
மேலும், இன்ஸ்பெக்டர் கண்ணன் தவறான செயலுக்கு அவரது கார் ஓட்டுநர்களான காவலர்களும் உடந்தையாக இருந்தது உறுதியானது. இதனை அடுத்து பணியின் போது ஒழுங்கினமாக நடந்ததால் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க இணை கமிஷனருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் கண்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அடேங்கப்பா..! இத்தனை பேரா..!! SETC வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்..!