இஸ்ரேல் - ஈரான் நாடுகள் இடையே நடக்கும் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்கதலில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. அந்நாட்டு அணு ஆயுத கிடங்குகளை நோக்கி, அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன.
இந்நிலையில், ஈரானுக்கு உதவ தயார் என ரஷ்யா அறிவித்துள்ளதால், போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஈரானில் இருந்த இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஆபரேஷன் சிந்து நடவடிக்கை மூலம், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் இருந்து ஜோர்டான் வழியாக, விமானம் மூலம் 161 இந்தியர்கள் பத்திரமாக டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இன்று அதிகாலை டில்லி வந்தடைந்த இந்தியர்களை வெளியுறவு இணை அமைச்சர் பபித்ரா மார்கிரிட்டா வரவேற்றார். அவர்களை தொடர்ந்து 165 இந்தியர்கள் ஜோர்டானுக்கு அழைத்து வரப்பட்டு, அங்குள்ள அம்மான் ஏர்போர்ட்டில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதையும் படிங்க: ஈரான் அடிபணியும் நாடு இல்லை! போர் நிறுத்தம் போங்கா? கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த காமெனி..!
இன்று காலை டில்லியில் வந்திறங்கிய 165 இந்தியர்களை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். இஸ்ரேலில் இருந்து டில்லி வந்தடைந்த இந்தியர்கள் ஆனந்தக் கண்ணீர் சிந்தினர். இஸ்ரேலில் தங்கள் அனுபவம் குறித்து, நாடு திரும்பிய இந்தியர்கள் கூறியதாவது:

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரம் தவிர, பிற அனைத்து இடங்களிலும் நிலைமை மோசமாக உள்ளது. குறிப்பாக டெல் அவிவில் எப்போதும் குண்டு சத்தம் கேட்டபடி உள்ளது.
இரும்பால் செய்யப்பட்ட பாதாள அறைகளில் பத்திரமாக தங்கியிருந்தோம். 22ம் தேதி எங்களை மீட்கும் நடவடிக்கை துவங்கியது. எங்கள் இடத்திற்கே வந்து மீட்ட நம் வெளியுறவு அதிகாரிகள், சாலை மார்க்கமாக ஜோர்டானின் அம்மான் விமான நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதிகாலை 3 மணிக்கு கிளம்பிய நாங்கள், பல மணி நேர பயணத்திற்கு பின் அம்மான் சென்றடைந்தோம். அங்கிருந்து விமானம் மூலம் குவைத் சென்று. குவைத்தில் இருந்து மற்றொரு விமானத்தில் டில்லி நோக்கி புறப்பட்டோம்.
எங்கள் விமானம் கத்தார் வான்வெளியில் பயணித்த போது, ஈரானில் இருந்து இஸ்ரேல் நோக்கி பாய்ந்த ஏவுகணைகளை பார்த்து மிரண்டு போனோம். அப்போது யுஏஇ அதன் வான் வழிப்பாதையை மூடிய தகவல் கிடைத்தது. உடனே நடு வழியில் எங்கள் விமானம் திருப்பிவிடப்பட்டது. மீண்டும் குவைத் வந்தடைந்தோம். அங்கு எங்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நான்கு மணி நேரத்திற்கு பின் வேறு பாதையில் விமானம் பயணிக்கும் என அறிவிக்கப்பட்டது.

அங்கிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை டில்லி வந்தடைந்தோம். எங்களை பத்திரமாக மீட்ட அரசுக்கு நன்றி என அவர்கள் கூறினர். படிப்பு, வேலை, தொழில், உறவினர்கள் சந்திப்பு என பல்வேறு காரணங்களுக்காக இஸ்ரேல் சென்றிருந்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். மேலும் நுாற்றுக்கணக்கான இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: வேலையை காட்டிய ஈரான்.. போர் நிறுத்தும் அறிவிக்கும் முன் மீண்டும் தாக்குதல்.. பதிலடி கொடுக்குமா இஸ்ரேல்?