யுஏஇயில் பெரும் அதிர்ச்சி! ஈரான் தாக்குதல் என போலியாக உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோ பரப்பிய இந்தியர்கள் 19 பேர் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யுஏஇ அரசு செய்தி நிறுவனமான எமிரேட்ஸ் நியூஸ் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தொடங்கிய போர் 15 நாட்களை கடந்து தீவிரமடைந்து வருகிறது. ஈரான் பதிலடியாக சவுதி அரேபியா, யுஏஇ, ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் விமான நிலையங்கள், எண்ணெய் கிடங்குகள், முக்கிய இடங்களை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனால் துபாய், அபுதாபி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேற்காசியா முழுவதும் போர் பதற்றம் உச்சத்தில் உள்ளது.
இதையும் படிங்க: துபாயில் மீண்டும் விமான சேவை பாதிப்பு! ஏர்போர்ட் அருகே எண்ணெய் கிடங்கை தாக்கி அழித்த ஈரான்!
இந்நிலையில், யுஏஇ மீது ஈரான் பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதாகக் காட்டும் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த வீடியோவில், துபாய் விமான நிலையம் அருகே வெடிப்புகள், தீப்பிழம்புகள், புகை மண்டலம் என உண்மையான தாக்குதல் போல சித்தரிக்கப்பட்டிருந்தது. இது பார்வையாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

இதனால் யுஏஇ அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். விசாரணையில் வீடியோவை உருவாக்கி பரப்பியவர்கள் வெளிநாட்டினர் என தெரியவந்தது. அதில் இந்தியர்கள் 19 பேர் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீது யுஏஇ சைபர் குற்றச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
யுஏஇ அதிகாரிகள் கூறுகையில், “போலி வீடியோக்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதோடு, சமூக அமைதிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய செயல்கள் தண்டனைக்குரியவை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 லட்சம் திர்ஹம் (சுமார் 5.7 கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்படும். கடுமையான தண்டனை நிச்சயம்” என்று எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் ஏஐ உருவாக்கும் போலி உள்ளடக்கங்களின் ஆபத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது. யுஏஇயில் வசிக்கும் இந்தியர்கள் இனி இத்தகைய உள்ளடக்கங்களை பகிர்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இடைவிடாது தாக்கும் ஈரான்!! வளைகுடா நாடுகளில் பதற்றம்! ஓமனில் 2 இந்தியர்கள் பலி!