லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய விமான மற்றும் விண்வெளி தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் காரணமாக சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
கலிபோர்னியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையில் விமானங்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படும் மெத்தில் மெத்தாகிரிலேட் (MMA) என்ற ரசாயனம் 7 ஆயிரம் கேலன் அளவுக்கு மூன்று பெரிய தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த ரசாயனம் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது மற்றும் தீப்பிடிக்கும் ஆபத்து மிகுந்தது.

நேற்று மதியம் திடீரென ஒரு தொட்டியில் இருந்து ரசாயனம் கசியத் தொடங்கியது. உடனடியாக அதிகாரிகள் எச்சரிக்கை செய்து, சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணியைத் தொடங்கினர். போலீஸ், தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து! சீனாவில் 80 பேர் பலியான சோகம்!!
இந்த ரசாயன கசிவால் பெரும் சுகாதார ஆபத்து ஏற்படும் என அஞ்சப்படுகிறது. அதிகாரிகள் தெரிவித்தபடி, மூன்று தொட்டிகளில் ஒன்றில் மட்டுமே தானாக குளிர்விக்கும் வசதி உள்ளது. கசிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை செய்து, அவசியம் இல்லாதவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. தொழிற்சாலை அதிகாரிகள் ரசாயன கசிவை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கலிபோர்னியாவில் தொழிற்சாலை பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. கசிவு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பிறகே மக்களை மீண்டும் அவர்களது இடங்களுக்கு அனுப்ப முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "தாய் மாமன் விஜய்"..! சிறுமி கொடூர கொலைக்கு என்ன சொல்லப் போறீங்க முதல்வரே..? நயினார் கேள்வி..!!