பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றக்கோரி போராடி வருகின்றனர். வாக்குறுதி எண் 181 ஐ நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நெற்றியில் வாக்குறுதி எண்ணை எழுதி, ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு சதவீத கணக்கைக் கூறி வருகிறார் என்றும் ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை அவருக்கு நினைவூட்ட, வாக்குறுதி எண் 181-ஐ, நெற்றியில் எழுதிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் எனவும் கூறினார்.

கடந்த 2016 தேர்தலிலேயே, பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து, அவர்கள் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவளித்த அப்போது எதிர்க்கட்சியாக இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பெண் எரித்துக் கொலை..! செயலிழந்து கிடக்கும் திமுக அரசு.. TVK கடும் கண்டனம்..!
கடந்த ஐந்து ஆண்டுகளாக, 10% வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றாமல், அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்க, தனது தங்கை தலைமையில் குழு அமைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் திமுக தமிழக மக்களை எத்தனை ஏளனமாகப் பார்க்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு எனவும் சாடியுள்ளார். திமுகவின் நம்பிக்கை மோசடிக்கு, 2026 தேர்தலில் தமிழக மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: திராவிட குப்பையை அடுப்பில் போட்டு தீந்தமிழ் பொங்கல் வையுங்கள்... சீமான் விமர்சனம்...!