இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் நடைபெற்று வரும் 'ரைசினா உரையாடல் 2026' (Raisina Dialogue) சர்வதேச மாநாட்டில், ஈரானின் துணை வெளியுறவுத் அமைச்சர் சயீத் கதிப்சாதே (Saeed Khatibzadeh) அமெரிக்காவிற்கு எதிராகக் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அத்துமீறல்கள் தொடர்ந்தால், அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ இருப்பையே முற்றிலுமாக ஒழிக்க வேண்டியிருக்கும் என அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ரேடார்கள் என்ன மீன்பிடிக்கவா வைக்கப்பட்டுள்ளன? அவை ஈரானை அழிக்கவே நிறுத்தப்பட்டுள்ளன" என அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். அமெரிக்கா தனது எல்லையிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி வந்து, ஈரானின் ஜனநாயக முறையிலான ஆட்சியைக் கவிழ்க்க நினைப்பது காலனிய மனப்பான்மை என்றும் அவர் சாடினார்.
தற்போதைய மோதலை வெறும் எல்லைப் போர் என்று கருத முடியாது. இது ஈரானின் இருத்தலுக்கானப் போர் என்று குறிப்பிட்ட அவர், "அமெரிக்காவின் இருப்பை இப்பிராந்தியத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "டெல்லி போலீசார் வரும் வரை தமிழக ATS தூங்கிக் கொண்டிருந்ததா?" - எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் சரமாரி கேள்வி!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு எதிராக, ஈரானின் கடைசிச் சிப்பாய் மற்றும் கடைசித் தோட்டா உள்ளவரைத் தாங்கள் தற்காப்புப் போரில் ஈடுபடுவோம் என அவர் உறுதியளித்தார்.
இந்தியக் கடற்படையின் அழைப்பை ஏற்றுச் சென்ற தங்களது போர்க்கப்பலை (Dena) அமெரிக்கா தாக்கியது மனிதாபிமானமற்றச் செயல் என்றும், இதில் பல இளம் ஈரானிய மாலுமிகள் உயிரிழந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
அமெரிக்கா ஒரு "கால்பந்து ஆட்ட" மனநிலையில் (American Football mentality) தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் ஈரான் "சதுரங்க ஆட்ட" (Chess mentality) மனநிலையில் ராஜதந்திரமாகச் செயல்படுகிறது. பேச்சுவார்த்தை மட்டுமே இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் தலைமையை மாற்ற நினைப்பதைக் கேலி செய்த கதிப்சாதே, "நியூயார்க் நகர மேயரைக் கூட நியமிக்கத் துப்பில்லாத ட்ரம்ப், ஈரானின் தலைமை குறித்துப் பேசுவது வேடிக்கையானது" எனக் காட்டமாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: திருப்பூரில் பயங்கரவாதிகள் வேட்டை: வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் நள்ளிரவில் அதிரடி!