மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் காரணமாகச் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால், தாய்லாந்து மற்றும் வியட்நாம் அரசுகள் தங்களது ஊழியர்களை மீண்டும் 'வீட்டிலிருந்தே பணி செய்ய' (Work From Home) அறிவுறுத்தியுள்ளன.
தாய்லாந்து காபந்து பிரதமர் அனுதின் சர்ன்விராகுல், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் உடனடியாக வீட்டிலிருந்தே பணி செய்ய உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கான சேவைகள் பாதிக்கப்படாத துறைகளில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலகங்களில் ஏசி வெப்பநிலையை 26-27°C ஆக வைக்கவும், லிஃப்டிற்குப் பதில் படிக்கட்டுகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வியட்நாம் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம், தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைச் சாத்தியமான இடங்களில் வீட்டிலிருந்தே பணி செய்ய ஊக்குவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய கிழக்கு போர்: உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலை..!! இந்திய பாஸ்மதி அரிசி விலை வீழ்ச்சி..!!
வியட்நாமில் பெட்ரோல் விலை 32 சதவீதமும், டீசல் விலை 56 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஹனோய் போன்ற முக்கிய நகரங்களில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்தில் எரிபொருள் ஏற்றுமதிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைகளில் உள்ள நிலையங்களைத் தவிர மற்ற பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணிக்கே மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த எரிசக்தி நெருக்கடி காரணமாகப் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலும் பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டு, மின்சாரச் சேமிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சரணடைய மறுக்கும் ஈரான்..! மிரட்டும் ட்ரம்ப்! ஈரான் மிக கடுமையாக தாக்கப்படும்! ட்ரம்ப் எச்சரிக்கை!