இஸ்ரேல், ஈரான் இடையே 12 நாட்கள் நடந்த பயங்கர போர் மொத்த உலகத்தையும் பதைபதைக்க வைத்தது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை எதிர்த்து 13ம் தேதி போரை துவங்கிய இஸ்ரேல், ஈரானின் முக்கிய அணு ஆராய்ச்சி கூடங்களான நடான்ஸ், ஃபோர்டோ, இஸ்பஹான் மையங்கள், ஏவுகணை ஏவுதளங்கள், ராணுவ தளங்களை குறி வைத்து குண்டு மழை பொழிந்தது.
முக்கிய தளபதிகள், அணு விஞ்ஞானிகளை துல்லியமாக குண்டு வீசி கொலை செய்தது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா, கத்தார் மத்தியஸ்தம் செய்து 24ம் தேதி சண்டையை நிறுத்தின. இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 28 பேர் கொல்லப்பட்டனர். ஈரானில் 630 பேர் இறந்ததாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டது.

இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முக்கிய தளபதிகள், அணு விஞ்ஞானிகள், அவர்களது குடும்பத்தினர் 60 பேரின் இறுதிச்சடங்கு நேற்று டெஹ்ராவில் நடந்தது. அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. தளபதிகள், அணு விஞ்ஞானிகளின் சடலம் இருந்த சவப்பட்டிக்கு ஈரான் நாட்டு கொடியை போர்த்தி இருந்தனர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது.
இதையும் படிங்க: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஏமன்..! மேற்கு ஆசியாவில் ஓயாத மரண ஓலம்!!
பல ஆயிரம் மக்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். கருப்பு உடை அணிந்து வந்து இருந்தனர். அமெரிக்காவை அழிப்போம்; இஸ்ரேலை அழிப்போம் என்று விண் அதிர கோஷம் போட்டனர். இஸ்ரேல் நடத்திய ‛டார்கெட் கில்லிங்’கால் இந்த போரில் ஈரானுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. அணு சக்தி மையம், ராணுவ கூடங்களை தாக்கியதோடு, முக்கிய தலைவர்கள், விஞ்ஞானிகள் இருக்கும் இடத்தையும் மொசாட் உளவு அமைப்பு மூலம் மொப்பம் பிடித்து குண்டு வீசியது.

இந்த தாக்குதலில் ஈரானின் 10க்கும் மேற்பட்ட முக்கிய தளபதிகள், 15 அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஈரானின் அனைத்து வகை ராணுவ படைகளின் தலைமை தளபதியான முகமது ஹூசைன் பகேரி கொல்லப்பட்டார். இவர் உச்ச தலைவர் கமெனிக்கு அடுத்த ரேங்கில் இருந்தவர்.
முகமது பகேரியுடன் அவரது மனைவி, மகளும் தாக்குதலில் இறந்தனர். இப்போது மூன்று பேர் சடலங்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றன. அதே போல் ஈரானின் முக்கிய படையான இஸ்லாமிய புரட்சிகர ராணுவ படையின் தலைமை தளபதி ஹூசைன் சலாமியும் கொல்லப்பட்டார்.

ஈரானின் பலம் அதன் ஏவுகணைகள். அது தான் இஸ்ரேலுக்கு பெரிய அச்சுறுத்தல். அந்த ஏவுகணை பிரிவையும் சலாமி தான் தலைமை ஏற்று நடத்தி வந்தார். இதனால் இஸ்ரேலின் முக்கிய டார்கெட்டாக சலாமி இருந்தார். அவரும் இந்த போரில் கொல்லப்பட்டார். அதே போல் மத்திய ராணுவ தலைமையகத்தின் தலைவர் கோலம் அலி ரஷித் உட்பட 10க்கும் மேற்பட்ட தளபதிகளை இஸ்ரேல் கொலை செய்தது.
இவர்கள் தவிர Fereydoun Abbasi, Mohammad Mehdi Tehranchi உட்பட ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகள் 15 பேர் இஸ்ரேலின் குண்டு வீச்சில் மடிந்தனர். Fereydoun Abbasi ஈரான் அணு சக்தி அமைப்பின் தலைவராக பதவி வகித்தவர். Mohammad Mehdi Tehranchi, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிக் ஆசாத் பல்கலைகழகத்தின் தலைவராக இருந்தார். இவர்கள் அனைவருக்கும் இன்று இறுதி ஊர்வலம் நடந்து முடிந்து விட்டது.
இதையும் படிங்க: போர் நிறுத்தத்தை மீறி லெபனானில் குண்டுமழை.. மீண்டும் மோதலில் இஸ்ரேல் - ஈரான்..!