ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கடல்சார் விதிகளை மீறியதாகக் கூறி, இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த கப்பல் உட்பட இரண்டு சரக்குக் கப்பல்களை ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) இன்று அதிரடியாகச் சிறைபிடித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான தற்காலிகப் போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஈரான் கடற்படையினர் இன்று காலை இரண்டு முக்கியக் கப்பல்களைத் தடுத்து நிறுத்தி, ஈரான் கடற்கரை நோக்கித் திருப்பிவிட்டனர். லைபீரியா நாட்டின் கொடியுடன் வந்த எப்பமினோண்டாஸ் (EPAMINONDAS) சரக்குக் கப்பல், துபாயின் ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கு (Mundra Port) வந்து கொண்டிருந்தது. பனாமா நாட்டின் கொடியுடன் வந்த எம்.எஸ்.சி பிரான்செஸ்கா (MSC FRANCESCA) கப்பல், இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பல் இஸ்ரேலுடன் தொடர்புடையது என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் கப்பல்கள் தேவையான அனுமதிகள் இன்றி பயணித்ததாகவும், வழிசெலுத்தல் அமைப்புகளில் குளறுபடி செய்து கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் அமைதி மற்றும் ஒழுங்கைச் சீர்குலைப்பதே எங்களது சிவப்புக் கோடு என ஈரான் கடற்படை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணையில் 14 இந்திய கப்பல்கள் தவிப்பு! மத்திய அரசின் தீவிர ராஜதந்திர முயற்சிகள்!

சிறைபிடிக்கப்பட்ட கப்பல்கள் தவிர, மேலும் மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரேக்கத்திற்குச் சொந்தமான யுபோரியா (Euphoria) கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அது ஈரான் கடற்கரைக்கு அருகே நடுக்கடலில் தத்தளித்து வருகிறது. ஒரு லைபீரியா கப்பலின் 'பிரிட்ஜ்' (Bridge) பகுதி துப்பாக்கிச் சூடு மற்றும் ராக்கெட் குண்டுகளால் பலத்த சேதமடைந்ததாகத் தெரிகிறது. இருப்பினும், கப்பல்களில் இருந்த மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கடந்த வாரம் ஜக் அர்னவ் மற்றும் சன்மார் ஹெரால்டு ஆகிய இந்தியத் தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இப்போது குஜராத் நோக்கி வந்த கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளது இந்திய வெளியுறவுத் துறைக்குக் கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியா ஈரான் அதிகாரிகளுடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஹார்முஸ் நீரிணை என்பது உலக எரிசக்தி தேவையில் பெரும் பகுதியை விநியோகிக்கும் முக்கிய வழிப்பாதையாகும். இங்கு ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் பதற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரான் தூதருக்கு இந்தியா சம்மன்! இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு டெல்லி கடும் கண்டனம்!