ஈரான்-அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் உலக பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில் லெபனானில் இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதல்களுக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து லெபனான்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த சூழலில் ஈரான் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக திறந்துவிடுவதாக அறிவித்தது.
எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் கப்பல்கள் செல்ல அனுமதி அளிப்பதாகவும் தெரிவித்தது. இந்த அறிவிப்பால் உலக நாடுகள் பெரும் நிம்மதி அடைந்தன. உலகின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் போக்குவரத்து இந்த நீரிணை வழியாகவே நடைபெறுவதால், எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் தீரும் என எதிர்பார்க்கப்பட்டது. வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச எண்ணெய் விலை கணிசமாக குறைந்தது. ஆனால், இந்த நிலை நீடிக்கவில்லை.
சனிக்கிழமை ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றியது. ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பதாக அதன் இராணுவம் அறிவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு எதிராக தொடர்ந்து முற்றுகை (blockade) விதித்து வருவதே காரணம் என ஈரான் கூறுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் முழுமையான ஒப்பந்தம் (nuclear program உள்ளிட்டவை) ஏற்படும் வரை இந்த முற்றுகை தொடரும் என வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இதனால் ஈரான் அதிருப்தி அடைந்து, நீரிணையை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால்... ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை தான்..!! டிரம்ப் வார்னிங்..!!

இந்த நீரிணை உலக எண்ணெய் சந்தைக்கு மிக முக்கியமானது. தினசரி சுமார் 130க்கும் மேற்பட்ட கப்பல்கள் இதன் வழியாக செல்லும் வழக்கம். போர் தொடங்கியதில் இருந்து போக்குவரத்து பெருமளவில் குறைந்து, எண்ணெய் விலை உயர்வுக்கு வழிவகுத்தது. லெபனான் போர் நிறுத்தத்துக்குப் பின் திறப்பு அறிவிக்கப்பட்டபோது விலை குறைந்தாலும், புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் என அஞ்சப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் எரிசக்தி நெருக்கடி தீவிரமடையும் அபாயம் உள்ளது.
ஈரான்-அமெரிக்கா இடையிலான இந்த மோதல், பாகிஸ்தான் மூலம் ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை சிக்கலாக்கியுள்ளது. டிரம்ப் நிர்வாகம், ஈரான் துறைமுகங்களுக்கு மட்டுமே முற்றுகை என விளக்கினாலும், ஈரான் இதை முழு உடன்பாட்டு மீறல் எனக் கருதுகிறது. இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகக் கூறினாலும், ஹார்முஸ் பிரச்னை தீராத வரை முழு அமைதி சாத்தியமில்லை என தெரிகிறது.
உலக நாடுகள் இந்தப் பதற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஐரோப்பிய நாடுகள் உட்பட பலர், நீரிணையில் சுதந்திரமான போக்குவரத்தை உறுதி செய்ய வலியுறுத்துகின்றன. எரிபொருள் விலை உயர்வு, உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழல் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது.
இதையும் படிங்க: மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்: ஈரான், லெபனான் மீது போர்..!! இத்தனை லட்சம் கோடி செலவு செய்ததா இஸ்ரேல்..!!