ஈரானுக்கு எதிராக 13ம் தேதி இஸ்ரேல் போரை துவங்கியது. அணு சக்தி மையங்கள், ராணுவ கட்டமைப்புகளை குறி வைத்து குண்டு வீசியது. முதல் நாள் தாக்குதலில் அணு விஞ்ஞானிகள், ராணுவத்தின் பிரதான தளபதி உட்பட பல முக்கிய தளபதிகளை கொன்று குவித்தது. இஸ்ரேலின் டார்கெட் கில்லிங் ஈரானை மிரள விட்டது. உச்ச தலைவர் கமெனியையும் இஸ்ரேல் குண்டுகள் குறி வைக்க கூடும் என்ற அச்சம் தொற்றியது.
13ம் தேதியே அவசர அவசரமாக ரகசிய இடத்துக்கு கமெனியும் அவரது குடும்பத்தினரும் மாற்றப்பட்டனர். ஈரானின் வடகிழக்கு நகரம் ஒன்றுக்கு பக்கத்தில் ரகசிய பாதாள அறைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.இஸ்ரேல் தாக்க ஆரம்பித்த பிறகு கமெனி பொதுவெளியில் தலை காட்டவில்லை.

12 நாட்கள் இஸ்ரேல் ராணுவம் குண்டு மழை பொழிந்த போதும், இடையில் அமெரிக்க படைகள் இறங்கி அடித்த போதும் கமெனி வெளியே வரவில்லை. பங்கரில் தான் இருந்தார். இப்போது இஸ்ரேல், ஈரான் போரே முடிவுக்கு வந்து விட்டது. அதன் பிறகும் கமெனி பொதுவெளிக்கு வரவில்லை. போர் நிறுத்தம் பற்றி உச்ச தலைவரிடம் இருந்து ஒரு தகவலும் வரவில்லை.
இதையும் படிங்க: தணியாத போர்ப்பதற்றம்.. ஈரானில் இருந்து டெல்லி வந்த மேலும் 272 இந்தியர்கள்..!
போருக்கு பிறகு ஈரான் அமைதியாகி விட்டாலும் கூட, கமெனி விவகாரம் தீப்பிடிக்க துவங்கி இருக்கிறது. ஈரான் மக்களுக்கு கமெனி உயிர் முக்கியம். அவரை 2 வாரமாக பார்க்க முடியாததால் கவலையில் இருக்கின்றனர். அவரை குறி வைத்து இஸ்ரேல் தாக்கி இருக்குமோ; கமெனி கொல்லப்பட்டு இருக்கலாமோ என்றும் கூட சந்தேகம் கிளப்புகின்றனர். ஆனால் ஈரான் அரசாங்கம் இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்கிறது.

கமெனியின் உயர் மட்ட நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரி ஃபசேலியிடம் அரசு டிவி ஆங்கர் ஒருத்தர் பேட்டி எடுத்தார். அப்போது நேரடியாகவே கமெனி பற்றி கேட்டார்.‛ஈரான் மக்கள் எல்லோருமே கமெனி பற்றி தான் கவலைப்படுகிறார்கள். அவர் எப்படி இருக்கிறார் என்று சொல்ல முடியுமா’ என்று கேட்டார். அதற்கு ஃபசேலி நேரடியாக எந்த பதிலையும் சொல்லவில்லை.
மாறாக, ‛நாம் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும். உச்ச தலைவரை பாதுகாக்கும் வேலையை வீரர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்’ என்றார். போர் சூழலில் உச்ச தலைவராக முடிவெடுக்கும் தகுதியை கமெனி இழந்து விட்டதால் அவரை ஓரங்கட்டி இருக்கின்றனர். ராணுவமும், உயர் மட்ட பாதுகாப்பு அமைப்பும் சேர்ந்து தான் இப்போது ஈரானை வழிநடத்துகின்றன.
எல்லா முடிவுகளையும் இந்த 2 அமைப்புகளுமே எடுக்கின்றன. போர் நிறுத்தம் கூட இவர்கள் எடுத்த முடிவு தான். பங்கரில் இருக்கும் கமெனி முற்றிலும் வெளியுலக தொடர்பை இழந்து இருக்கிறார். அவரிடம் எந்த டிஜிட்டல் டிவைசும் இல்லை. போரை நிறுத்திய பிறகும் கூட கமெனியை இஸ்ரேல் குறி வைத்துக்கொண்டு தான் இருக்கும் என்று அச்சம் நிலவுகிறது.

இதனால் தான் அவர் தொடர்ந்து பங்கரில் வைக்கப்பட்டு இருக்கிறார். இஸ்லாமிய புரட்சிகர ராணுவ படையின் எலைட் குரூப் தொடர்ந்து அவருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பை வழங்கி வருகிறது என்கிறது மத்திய கிழக்கு ரிப்போர்ட். கமெனிக்கு பதில் முடிவெடுக்கும் முக்கிய அமைப்பில், அவரது 2வது மகன் மொஜ்தபா கமெனி இருக்கிறார். இஸ்லாமிய புரட்சிகர ராணுவ படை தளபதிகளிடமும் உச்ச மத தலைவர்களிடமும் இவருக்கு நல்ல செல்வாக்கு உண்டு.
இஸ்ரேல் போர் துவங்கும் முன்பே தனது உயிருக்கு ஏதாவது ஆனால் அடுத்த உச்ச தலைவராக யார் வர வேண்டும் என்று சிலரை கமெனி கை காட்டியதாக சொல்லப்படுகிறது. அந்த பட்டியலில் அவரது 2வது மகன் மொஜ்தபா கமெனி பெயரும் இருக்கிறது. அவர் தவிர மூத்த மதகுரு அலிரெசா அராபி, குவாம் மதப்பள்ளி கல்வி சங்க தலைவராக இருக்கும் ஹாஷிம் ஹொசைனி உள்ளிட்டோர் பெயர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கமெனி எங்கே இருக்கிறார் என்று தேடும் ஈரான் மக்களுக்கு அவர் பற்றி வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன
இதையும் படிங்க: 3வது உலகப்போர் துவங்கி இருக்கும்.! இந்தியா - பாக்., ஈரான் - இஸ்ரேல் போர் ரகசியங்களை உடைக்கும் ட்ரம்ப்..