இந்திய பெருங்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஈரானின் அதிநவீன IRIS Dena போர்க்கப்பலை அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்த சம்பவத்திற்கு, ஈரான் ராணுவத் தலைமைத் தளபதி அமீர் ஹடாமி மிகக் கடுமையான எதிர்வினையாற்றியுள்ளார். அமெரிக்காவின் இந்த மன்னிப்பு வழங்க முடியாத அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்காமல் ஈரான் பின்வாங்காது என அவர் சூளுரைத்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஈரானின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீனப் போர்க்கப்பலான IRIS Dena, அமெரிக்கப் படைகளின் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகித் தகர்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இன்று தெஹ்ரானில் உரையாற்றிய தளபதி அமீர் ஹடாமி, அமெரிக்கா ஒரு மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டது. எங்களது வீரர்களின் தியாகம் வீண் போகாது. இதற்குரிய பதிலடியை அமெரிக்கா நிச்சயம் அனுபவிக்கும் என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி தவித்த ஈரானிய கப்பலுக்கு இலங்கை உதவி!

இந்தத் தாக்குதலில் பலியான வீரர்கள், ஈரானியக் கடற்படை வரலாற்றில் தைரியத்தின் அடையாளமாக என்றென்றும் போற்றப்படுவார்கள் என்றும், அவர்களது தியாகம் ஈரானின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் புதிய உத்வேகத்தைத் தரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஏற்கனவே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நேரடிப் போரை (Full-scale war) உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அரேபியக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்களுக்கு உயர் பாதுகாப்பு எச்சரிக்கை (High Alert) விடுக்கப்பட்டுள்ளது. ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) எப்போது வேண்டுமானாலும் தனது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்! மத்திய அரசு மௌனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி!