அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே போர் மூண்டுள்ள சூழலில், இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த ஈரானிய கடற்படையின் மற்றுமொரு கப்பலான 'ஐ.ஆர்.ஐ.எஸ் புஷேர்' (IRIS Bushehr) மற்றும் அதில் இருந்த 208 வீரர்களை இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் 'ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா' கப்பல் மூழ்கடிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்த மீட்பு நடவடிக்கை நடைபெற்றுள்ளது.
'புஷேர்' கப்பலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாகவும், அமெரிக்காவின் அடுத்த இலக்காகத் தாங்கள் மாறிவிடுவோம் என்ற அச்சத்தில் ஈரானிய வீரர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க மனிதாபிமான அடிப்படையில் அவர்களை மீட்க உத்தரவிட்டார்.

அந்தக் கப்பலில் இருந்த 53 அதிகாரிகள், 84 கேடட்கள், 48 மூத்த மாலுமிகள் மற்றும் 23 இளநிலை மாலுமிகள் என மொத்தம் 208 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் வேலிசறையில் உள்ள கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு...! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!
கொழும்பு துறைமுகம் பரபரப்பான வணிகத் தலம் என்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த ஈரானியக் கப்பலை இலங்கை கடற்படை வீரர்கள் பொறுப்பேற்று, வடகிழக்கில் உள்ள திருகோணமலை (Trincomalee) ஆழ்கடல் துறைமுகத்திற்கு நங்கூரமிடக் கொண்டு செல்கின்றனர்.
முன்னதாக மார்ச் 4 அன்று, விசாகப்பட்டினத்தில் நடந்த கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிய ஈரானின் IRIS Dena போர்க்கப்பலை அமெரிக்காவின் 'மார்க் 48' ரக டார்பிடோ ஏவுகணைத் தாக்கி மூழ்கடித்தது. இதில் 87 வீரர்கள் பலியாகினர், 32 பேர் மட்டுமே இலங்கை கடற்படையால் உயிருடன் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசு இந்தப் போரில் தாங்கள் நடுநிலை வகிப்பதாகவும், கடலில் தத்தளிக்கும் உயிர்களைக் காப்பதே தங்களது கடமை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெள்ளை மாளிகையில் பிரார்த்தனை! ஈரான் போரில் ட்ரம்புக்கு ஆதரவாக மத போதகர்கள் ஜெபம்!