அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி குறித்து ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. “அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடரும் வரை ஹார்முஸ் வழியாக ஒரு சொட்டு எண்ணெய் அல்லது எரிவாயு கூட பாதுகாப்பாக செல்ல முடியாது” என்று ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள்கிழமை அதிகாலை அமெரிக்கா தொடர்ந்து 9-வது நாளாக ஈரானின் பல்வேறு ராணுவ இலக்குகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடிப்பில் சிக்கி சேதமடைந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால், அந்தக் கப்பல்களின் அடையாளம் மற்றும் சேதம் தொடர்பான தகவல்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்க ராணுவம் தண்டனையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பாக இருக்காது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதேவேளை, ஓமன் கடற்கரைக்கு அருகே ஒரு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக பிரிட்டன் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: "ஈரான் செல்ல வேண்டாம்... இந்தியர்களுக்கு மத்திய அரசின் அவசர எச்சரிக்கை!"

அமெரிக்கா தரப்பில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஈரானின் ராணுவ திறனைக் குறைப்பதே இந்த தாக்குதல்களின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்ரிஸ், சாபஹார், கொனாரக், பந்தர் மக்ஷஹர் உள்ளிட்ட பல நகரங்களில் தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் நினைவாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க தரப்பில் 17 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 420-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், அமெரிக்க தாக்குதல்களில் ஈரானில் குறைந்தது 50 பேர் உயிரிழந்ததாகவும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்த மோதல் காரணமாக பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலரைத் தாண்டி உயர்ந்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்கா-ஈரான் மோதல் தீவிரம்... 7 நாட்களாக ஓயாத தாக்குதல்.. கவலையில் உலக நாடுகள்.!