ஈரான் நாட்டின் நீண்டகால உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி (86), இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். பல தசாப்தங்களாக ஈரானின் அதிகார மையமாகத் திகழ்ந்த கமேனியின் மரணம், மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்திற்கானத் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி மையங்களைக் குறிவைத்துத் தாக்குதலைத் தொடங்கின. இதில் தெஹ்ரானில் உள்ள கமேனியின் பாதுகாக்கப்பட்ட குடியிருப்பு வளாகம் ஏவுகணைகளால் தரைமட்டமாக்கப்பட்டது.

தாக்குதலுக்குப் பின் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கமேனி உயிருடன் இருப்பதற்கானச் சான்றுகள் ஏதுமில்லை எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரலாற்றின் மிக மோசமான நபரான கமேனி கொல்லப்பட்டுவிட்டார் என உறுதிப்படுத்தினார்.
இதையும் படிங்க: ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!
ஆரம்பத்தில் இந்தச் செய்தியை மறுத்த ஈரான், பின்னர் இன்று (மார்ச் 1, 2026) அதிகாலை கமேனியின் மறைவை அதிகாரப்பூர்வமாகத் தனது அரசுத் தொலைக்காட்சி மூலம் உறுதிப்படுத்தியது. கமேனியுடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்ட ராணுவத் தளபதிகளும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கமேனியின் மறைவையடுத்து, ஈரானில் 40 நாட்கள் தேசியத் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 1989 முதல் ஈரானை வழிநடத்தி வந்த கமேனியின் மரணம், அந்நாட்டு வரலாற்றில் ஒரு நீண்ட கால அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மத்தியக் கிழக்கில் முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சர்வதேச நாடுகள் மிகுந்த கவலையுடன் நிலைமையைக் கண்காணித்து வருகின்றன.
இதையும் படிங்க: முற்றும் மோதல்: இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.. பற்றி எரியும் ஈரான்..!! நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம்..!!