மேற்காசியாவில் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது ஈரான்.
"கார்க் தீவு மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கு உரிய இடத்திலிருந்து தாக்கியவர்களின் அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களையும் சாம்பலாக்கி விடுவோம்" என ஈரான் ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் அபுல்பாஸ்ல் ஷெகர்ச்சி (Abolfazl Shekarchi) கூறியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி போர் தொடங்கியது. இப்போது 18-வது நாளாக தொடரும் இந்த மோதலில், இரு தரப்பும் தினசரி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கார்க் தீவு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை கையாளும் மிக முக்கிய இடம்.
இதையும் படிங்க: கார்க் தீவு மீதான தாக்குதல் தீவிரமாகும்!! ஜாலிக்கு கூட தாக்குவோம்! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல்!
இத்தீவில் உள்ள ராணுவ கட்டமைப்புகளை அமெரிக்கா மார்ச் 13-ஆம் தேதி குண்டுவீசி அழித்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். "எண்ணெய் கிணறுகள், சேமிப்பு மையங்களை தாக்கவில்லை, மனிதாபிமான காரணங்களுக்காக" என்றும் அவர் கூறினார்.
ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கினால், எண்ணெய் உள்கட்டமைப்புகளை அழிப்போம், "ஜாலியாக கூட செய்வோம்" என்று டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இதற்கு பதிலடியாக ஷெகர்ச்சி கூறியுள்ளார்: "எங்கள் எண்ணெய் அல்லது எரிசக்தி துறை மீது தாக்குதல் நடத்தினால், கடுமையான, நிச்சயமான பதிலடி கொடுப்போம். கார்க் தீவு மீது தாக்கினால், அதைத் தொடங்கிய இடத்தை சாம்பலாக்குவோம். அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் அல்லது அமெரிக்க தளங்கள் கொண்ட நாடுகளுக்கு எச்சரிக்கை – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்றவை அமெரிக்காவை தங்கள் மண்ணிலிருந்து தாக்க அனுமதித்தால், அந்நாடுகளின் எண்ணெய், எரிவாயு நிலையங்கள் இலக்காகும்."
இதற்கிடையே, ஈரான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார் ஆகியவை வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் முறியடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் தீ விபத்தும் ஏற்பட்டது. தூதரகத்தின் ஹெலிபேட், தகவல் மையம் சேதமடைந்துள்ளன.
போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில், உலக எண்ணெய் சந்தை பெரும் அதிர்வுக்கு உள்ளாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இரு தரப்பும் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதால், பிராந்தியம் முழுவதும் போர் வெடிக்கும் அச்சம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழி தீர்ப்போம்!! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்!