மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தெற்கு லெபனானில் இருந்து தனது ராணுவத்தையும் விமானப்படையையும் திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா வலியுறுத்தினாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்ற அவரது கருத்து புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தை குறைக்கும் நோக்கில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்தும் முயற்சிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், லெபனானில் நடைபெறும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் சர்வதேச அளவில் வலுத்து வருகின்றன.
ஆனால், லெபனானின் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், பிராந்தியத்தில் அமைதி ஏற்படுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவை சார்ந்திருப்பதை அடியோடு நிறுத்த வேண்டும்!! அதிபர் ட்ரம்புடன் கருத்து வேறுபாடு? இஸ்ரேல் பிரதமர் காட்டம்!

இந்த நிலையில் பேசிய இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பகுதியில் இருந்து ராணுவ வீரர்களை திரும்பப் பெற முடியாது என்று தெரிவித்தார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தாலும், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் தனது நிலைப்பாட்டை மாற்றாது என்றும் அவர் கூறினார்.
மேலும், அந்தப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். பாதுகாப்பு நிலைமை முழுமையாக உறுதிப்படுத்தப்படும் வரை பெரிய அளவில் மக்கள் மீண்டும் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார். கடந்த காலங்களில் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில்கூட வன்முறை சம்பவங்கள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலின் இந்த உறுதியான நிலைப்பாடு, அமெரிக்காவின் தூதரக முயற்சிகளுக்கும் மத்திய கிழக்கில் நிலவும் அமைதி முயற்சிகளுக்கும் புதிய சவாலாக பார்க்கப்படுகிறது. இதனால், லெபனான் எல்லைப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: லெபனான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! 16 பேர் பலி!! நெதன்யாகு கொடுத்த வார்னிங்!