இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் தொடர்ந்து வரும் நிலையில், ஈரான் மீது ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக இஸ்ரேலின் முக்கிய நிலைகளை குறிவைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. பொதுமக்கள் வாழும் குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படும் நிலையில், கட்டடங்கள், நிறுவனங்கள் என பல்வேறு இடங்கள் தீக்கிரையாகின.

இப்படி இருக்கும் சூழ்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஈரானிய அரசு செய்தி ஒளிபரப்பு நிறுவனமான IRIB அலுவலகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இஸ்ரேலை சிதைத்து விடுவோம்... ஈரானுடன் கைகோர்த்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

இந்தத் தாக்குதல் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்ததாகவும், செய்தி வாசிப்பாளர் உட்பட ஊழியர்கள் பதற்றத்துடன் வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அரசு ஊடகம் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியதுடன், இஸ்ரேல் இந்தத் தாக்குதலை பயங்கரவாத செயலாகவும், உண்மையை வெளிப்படுத்தும் ஊடகங்களை அழிக்கும் முயற்சி என்றும் உண்மையை ஒடுக்கும் முயற்சி எனவும் கண்டித்துள்ளது. மேலும், தாக்குதலின்போது செய்தி வாசிப்பாளர் பயன்படுத்திய, இரத்தக் கறை படிந்த ஸ்கிரிப்டை IRIB தலைவர் காட்சிப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீண்டிய இஸ்ரேல்.. சீறிய ஈரான்..! மத்திய கிழக்கில் போர் பதற்றம்..!