சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி வெளியிட்ட அறிக்கையில், ஈரான் நாட்டின் நடான்ஸ் அணு உலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் கதிரியக்க மற்றும் இரசாயனக் கலப்படங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அந்த இடத்திற்கு வெளியே கதிர்வீச்சு அளவு இயல்பாகவே உள்ளது, எனவே பொதுமக்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். நடான்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து க்ரோஸி கூறுகையில், "நடான்ஸில் உள்ள அணு உலகை அமைப்பில் இஸ்ரேல் தாக்குதலால் கதிரியக்க மற்றும் இரசாயனக் கலப்படம் ஏற்பட்டுள்ளது.

அந்த வசதிக்குள் இருக்கும் ஆல்பா துகள்கள் போன்ற கதிர்வீச்சை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இனி கட்டுப்படுத்த முடியும். கசிவு ஏற்பட்டுள்ளது பற்றி தீவிர ஆய்வுகள், சோதனைகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார். மேலும், யுரேனியம்-235 ஐ 60 சதவீதம் வரை செறிவூட்டும் பைலட் எரிபொருள் செறிவூட்டும் ஆலையின் மேற்பரப்பு பகுதியை இஸ்ரேலிய தாக்குதல்கள் அழித்துவிட்டது. அங்கேயும் ஆய்வு செய்து வருகிறோம். சேதங்களை மதிப்பிடுவதற்கும், அணுசக்தி பாதுகாப்பு மற்றும் ஈரான் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஈரான் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துடன் நமது அமைப்பு தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
இதையும் படிங்க: எதிர்தாக்குதலில் இறங்கிய ஈரான்.. இஸ்ரேலில் 3 பேர் உயிரிழப்பு.. அதிகரிக்கும் போர்ப்பதற்றம்..!

ஈரான் தற்போது நடான்ஸ் எரிபொருள் செறிவூட்டும் ஆலை மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வசதியில் எரிபொருள் செறிவூட்டும் ஆலை மற்றும் பைலட் எரிபொருள் செறிவூட்டும் ஆலை உள்ளது. அந்த அணு உலையில் உள்ள முக்கிய மற்றும் அவசரகால மின் அமைப்புகள் உட்பட மின்சார உள்கட்டமைப்பும் அழிக்கப்பட்டதாகக் கூறினார். நிலத்தடி கேஸ்கேட் மண்டபத்திற்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்றாலும், மின்சாரம் தடைப்பட்டதால் அங்குள்ள coolant பாதிக்கப்பட்டிருக்கலாம்.

அதோடு ஃபோர்டோவ் எரிபொருள் செறிவூட்டும் ஆலை மற்றும் இஸ்பாஹான் வளாகம் உட்பட பிற இடங்களுக்கு அருகிலும் தாக்குதல்கள் நடந்ததாக ஈரான் முகமைக்கு தெரிவித்துள்ளது . இந்த வசதிகளில் யுரேனியம் மாற்றும் வசதி, எரிபொருள் தகடு தயாரிக்கும் ஆலை, எரிபொருள் உற்பத்தி ஆலை மற்றும் யுரேனியம் டை ஆக்சைடு (UO2) பவுடர் ஆலை ஆகியவை அடங்கும். இந்த இடங்களில் ஏற்பட்ட சேதத்தின் முழு அளவையும் ஐ.ஏ.இ.ஏ ஆய்வு செய்து வருகிறது. நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறி உள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் ட்ரோன் தாக்குதல்.. அசாதாரண சூழல்.. இந்தியர்களுக்கு அதி முக்கிய அறிவிப்பு!