மேற்கு ஆசிய நாடுகளான ஈரானும், இஸ்ரேலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல், கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு எதிராக, காசா மீது இஸ்ரேல் தொடங்கிய போர் மூலம் மேலும் மோசமடைந்து உள்ளது.

இந்நிலையில் ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று முக்கிய படைத்தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய அணு ஆயுத தளம் பலத்த சேதம் அடைந்தது. இந்த தாக்குதல்கள், இஸ்ரேலின் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்று பெயரிடப்பட்டவை, ஈரானின் அணு ஆயுதத் திறனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இஸ்ரேல்- ஈரான் ஆகிய இரு நாடுகளும் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டனர். கடைசி 45 ஆண்டுகளில் ஈரான் பார்த்திருக்காத கொடிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.
இதையும் படிங்க: ஈரான் மீதான தாக்குதலுக்கு பைபிளில் இருந்து பெயர்..! இஸ்ரேல் பிரதமர் வெளியிட்ட தகவல்..!

தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது நிச்சயம் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தரப்பில் கூறப்பட்டது. இதனால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் தனது அணு மற்றும் இராணுவ நிறுவல்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது. இஸ்ரேலை நோக்கி 150க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது ஈரான். ஈரானிய நீர்மூழ்கிக் கப்பல் இஸ்ரேலிய பிரதேசங்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. தொடர்ந்து பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டு வருகிறது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உள்பட முக்கிய நகரங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது. கிர்யா பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை அதன் ஏவுகணைகள் தாக்கியது. மேலும் இஸ்ரேல் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. 150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவிய நிலையில் அவற்றை நடுவானிலேயே தாக்கி அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேல் வான் பாதுகாப்பை மீறி தொடர் தாக்குதல் நடத்தி வரும் ஈரான் ஏவுகணைகளால் மத்திய கிழக்கில் பெரும் போர்ப் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் ஈரான் நடத்தி வரும் பதில் தாக்குதலில், இஸ்ரேலில் மூன்று பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். மேலும் இஸ்ரேல் மீதான இந்த தாக்குதலுக்கு ஈரான் மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இஸ்ரேல் மேல கையை வச்சா.. அடுத்த தாக்குதலுக்கு ஒன்னுமே இருக்காது.. ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்..!