ஆப்கானிஸ்தானில் தனியாக பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த பெண் டிராவல் விலாக்கரை தாலிபான் அதிகாரிகள் கைது செய்து, பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த அருணிமா, ‘பேக்பேக்கர் அருணிமா’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து, அங்குள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் தனது பயண அனுபவங்களை வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கும் அவர் சென்றுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் பாமியான் பகுதிக்கு சென்றபோது, முறையான ஆவணங்கள் மற்றும் தேவையான அனுமதிக் கடிதங்கள் இல்லாமல் தனியாக பயணம் செய்ததாகக் கூறி தாலிபான் அதிகாரிகள் அருணிமாவை கைது செய்ததாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள உதவி செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: கேரளாவில் ஒரு வயது குழந்தையின் உடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட ஊசி! ஸ்கேனில் வெளியான அதிர்ச்சி!
இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே நிலைமை மாறியது. தனக்கு ஏற்கனவே உதவி செய்த ஒருவரின் மூலம் தாலிபான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதன் பின்னர் தன்னை விடுவித்ததாகவும் அருணிமா மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார்.

இனி ஆப்கானிஸ்தானில் பயணம் மேற்கொள்ளும்போது முறையான அனுமதி பெற வேண்டும் என்றும், வழிகாட்டி ஒருவருடன் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் தாலிபான் அதிகாரிகள் நிபந்தனை விதித்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் தனியாக பயணம் செய்வதற்கு ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், அந்த விதிகளை மீறியதால் தன்னை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அருணிமா கூறியுள்ளார். ஒவ்வொரு மாகாணத்திற்கும் செல்ல தனித்தனியாக அனுமதி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயணத்தின்போது பலமுறை தாலிபான் அதிகாரிகள் தன்னை நிறுத்தி சோதனை செய்ததாகவும், பல்வேறு கேள்விகளை கேட்டதாகவும் அருணிமா கூறியுள்ளார். ஆண் பயணிகளை விட பெண்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக பயணத்தின் பெரும்பகுதியை பர்தா அணிந்தபடியே கடந்து சென்றதாகவும் அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான அருணிமாவின் சமூக வலைதள பதிவுகள் தற்போது கவனம் பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: அமெரிக்காவில் கேரள பெண்கள் இருவர் கொலை! நெருங்கிய தோழி கைது! ஓணம் கொண்டாட்டத்துக்கு மறுநாள் நடந்த அதிர்ச்சி!