மணிப்பூரில் இன மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. குகி-நாகா பழங்குடி சமூகத்தினரிடையே உக்ருல் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பல வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. புதிய ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே இந்த மோதல் வெடித்துள்ளது. நிலைமை கட்டுப்படுத்தப்படாமல் தொடர்வதால், உக்ருல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
உக்ருல் மாவட்டத்தில் உள்ள லிட்டன் சரேய்கோங் (Litan Sareikhong) கிராமத்தில் குகி-நாகா (குறிப்பாக டாங்குல் நாகா) சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி இரவு ஒரு நாகா இனத்தவர் தாக்கப்பட்டு, அவரது வீடு தீயிட்டு எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கலவரம் வெடித்தது. இதைத் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய நபர்கள் வீடுகளை தீவைத்தனர். துப்பாக்கிச் சூடும் நடந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
கலவரத்தில் 20 முதல் 30க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் சில அரசு குடியிருப்புகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இரு சமூகத்தினரும் சேர்ந்து ஒருவருக்கொருவர் வீடுகளை தீவைத்துள்ளனர். கிராம மக்கள் பயந்து ஓடியுள்ளனர். பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். பாதுகாப்புப் படையினர் களத்தில் இறங்கி நிலைமையை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர்.
இதையும் படிங்க: கிராம சுகாதார பணியாளர்களை தவிக்க விட்ட திமுக அரசு... வறுமையில் வாடும் குடும்பங்கள்..! குரல் கொடுத்த சீமான்..!

மணிப்பூரில் 2023 முதல் குகி-மைதேயி இன மோதல் நீடித்து வருகிறது. இதனால் பல கட்டுப்பாடுகள் இன்னும் நீக்கப்படவில்லை. பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் நாகா-குகி இடையேயான புதிய மோதல் மாநிலத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. புதிய ஆட்சி அமைந்த பிறகு இது முதல் பெரிய சம்பவமாகும்.
நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்க, உக்ருல் மாவட்டத்தில் இணைய சேவை (மொபைல் டேட்டா, பிராட்பேண்ட், VPN உள்ளிட்டவை) 5 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இது வதந்திகள் பரவாமல் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என அரசு தெரிவித்துள்ளது. சில இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மணிப்பூரில் இன மோதல்கள் தொடர்வது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த நிலையில், புதிய மோதல்கள் அமைதியை மேலும் சீர்குலைக்கும் அபாயம் உள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் உடனடியாக தலையிட்டு அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என அரசியல் வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.
இதையும் படிங்க: “அதெல்லாம் ஒரு கட்சினு.. பெரிய கட்சி பத்தி பேசுங்க ...” - தேமுதிகவை தெறிக்கவிட்ட திமுக அமைச்சர்...!