ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி, பல வாரங்களாக பொதுவெளியில் தோன்றாமல் இருந்த நிலையில், வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தனது தந்தை அயதுல்லா அலி கமேனியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது. இந்த தகவல் வெளியாகியுள்ளதால், மத்திய கிழக்கு அரசியல் வட்டாரங்களின் கவனம் மீண்டும் ஈரான் மீது திரும்பியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில், அந்நாட்டின் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, பாதுகாப்பு காரணங்களால் அவர் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகின.
பொதுமக்கள் முன்னிலையில் தோன்றுவதைத் தவிர்த்த மொஜ்தபா கமேனி, டெலிகிராம் மற்றும் அரசு ஊடகங்கள் வழியாக எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் மூலம் மட்டுமே தனது உத்தரவுகளை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கூட அவர் நேரில் பங்கேற்காதது சர்வதேச அளவில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அப்போது, பாதுகாப்பு காரணங்களால் அவர் வரவில்லை என்று ஈரான் அரசு விளக்கம் அளித்திருந்தது.
இதையும் படிங்க: இவங்க 14 பேரை பழிவாங்கியே ஆகணும்! ட்ரம்புக்கு வச்சாச்சு குறி! ஈரான் வெளியிட்ட ஹிட் லிஸ்ட்!

இந்த நிலையில், டெஹ்ரானில் வரும் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள அயதுல்லா அலி கமேனியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் மொஜ்தபா கமேனி பங்கேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் நேரில் கலந்து கொள்வாரா அல்லது காணொலி வாயிலாக உரையாற்றுவாரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
பல வாரங்களுக்குப் பிறகு மொஜ்தபா கமேனி பொதுமக்கள் பார்வைக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. அவரது பங்கேற்பு, ஈரானின் தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து புதிய தகவல்களை வெளிப்படுத்தக்கூடும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். நினைவேந்தல் நிகழ்ச்சிக்குப் பிறகு மொஜ்தபா கமேனி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவாரா என்பதையும் உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் ஜலசந்தி! ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி! போர் பதற்றம்!