தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள சாட்சுக் மாவட்டத்தில் அமைந்துள்ள ரோங் பீர் நா லாட்ப்ராவ் பப் எனும் பிரபல உணவகம்-பப் வளாகத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ள சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 63 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 22 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து ஏற்பட்ட சமயத்தில் பப்-இல் சுமார் 300 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இரவு 11:57 மணியளவில் மேடைப் பகுதியில் உள்ள ஏர் கண்டிஷனர் அல்லது சர்க்யூட் பிரேக்கரில் இருந்து புகை வெளியானது. பின்னர் மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டு வெடிப்பு ஏற்பட்டதுடன், தீ மளமளவென பரவியது. கரும்புகை விரைவில் முழு வளாகத்தையும் சூழ்ந்துகொள்ள, பீதியடைந்தவர்கள் பின்புறம் உள்ள சமையலறை மற்றும் கழிவறைப் பகுதிக்கு ஓடினர். ஆனால், அங்கு பாதுகாப்பான வெளியேற்ற வழி இல்லாததால் பலர் சிக்கிக்கொண்டனர்.

பாங்காக் மாநகராட்சி ஆளுநர் சாட்சார்ட் சிட்டிபுண்ட் தெரிவித்தபடி, இரு அவசர வெளியேற்ற வாயில்களும் தடைபட்டிருந்தன. ஒன்றில் பீர் கேஸ்கள் அடுக்கப்பட்டிருந்தன; மற்றொன்றில் மேசை ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த அலட்சியம் உயிரிழப்புகளை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 30 நிமிடங்களில் தீயை அணைத்தனர். புகை உள்ளிழுப்பே பெரும்பாலான உயிரிழப்புகளுக்குக் காரணம் என முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கோவில் திருவிழாவில் நடக்கக்கூடாத விபரீதம்... துடிதுடித்து ஓடிய பக்தர்கள்... 18 பேருக்கு ஏற்பட்ட பரிதாபம்...!
பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பெரும்பாலான பலியானவர்கள் 25 முதல் 50 வயதுக்கு உட்பட்ட தாய்லாந்து பிரஜைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு பேரின் உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாட்சுக் பகுதியில் உள்ள இந்த பப், வார இறுதி சந்தை, ஷாப்பிங் மால்கள் அருகே அமைந்துள்ள பிரபல இடம். உயிரிழப்பு குறித்து போலீசார் முழு விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கோளாறு, பாதுகாப்பு விதிமுறைகள் மீறல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆராயப்படுகின்றன. இந்த சம்பவம் தாய்லாந்தில் பொது இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த அதிர்ச்சி...!! - பயிற்சி மையத்தில் கொளுந்துவிட்டு எரிந்த தீ... பலி எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு...!