இமயமலையின் மத்தியில் அமைந்துள்ள நேபாளம், அதன் தனித்துவமான புவியியல் அமைப்பு காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்களை அடிக்கடி எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பேரழிவுகளின் தாக்கம் இன்னும் மறையாத நிலையில், ரசுவா மாவட்டத்தில் போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மீண்டும் நாட்டை உலுக்கியுள்ளது.
நேற்று ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சேதத்தின் முழுமையான மதிப்பீடு இன்னும் நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பு 2025 ஜூலை மாதத்திலும் இதே போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் ரசுவா மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பனிப்பாறை உருகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அந்த வெள்ளத்தில் நேபாளம்-சீனா எல்லையை இணைக்கும் மிதேரி பாலம் உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதமடைந்தன. 11 பேர் உயிரிழந்ததுடன், 19 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. 800-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இதையும் படிங்க: நேபாளத்தில் மீண்டும் ஆபத்து? ஆற்றங்கரையோர மக்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை! அரசு முக்கிய அறிவிப்பு!
2024 செப்டம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, நேபாளத்தின் சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளப் பாதிப்புகளில் ஒன்றை ஏற்படுத்தியது. 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதில் 246 பேர் உயிரிழந்தனர்.

183 பேர் காயமடைந்ததுடன், 18 பேரை காணவில்லை. 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். சாலைகள், பாலங்கள், நீர்மின் திட்டங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
2023-ம் ஆண்டிலும் பருவமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு கிழக்கு நேபாளத்தை உலுக்கியது. சங்குவாசபா, தப்லெஜுங், பஞ்ச்தார் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட பேரிடர்களில் உயிரிழப்புகளும், பலர் காணாமல் போன சம்பவங்களும் பதிவாகின. நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன.
2022-ல் கர்னாலி ஆற்றுப்படுகை மற்றும் மேற்கு நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் 36 பேர் உயிரிழந்தனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இதற்கு முன்பாக 2021 ஜூனில் மேலம்சி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் சிந்துபல்சவுக் மாவட்டத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. 300-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டதுடன், 1,500-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
நேபாளத்தின் மலைப்பகுதிகளில் இருந்து குறுகிய பள்ளத்தாக்குகள் வழியாக வேகமாக பாயும் ஆறுகள், நிலச்சரிவு அபாயம் மற்றும் பனிப்பாறைகள் உருகுவது ஆகியவை பேரிடர் அபாயத்தை அதிகரிக்கின்றன. காலநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் வேகமாக உருகுவது குறித்தும் ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
எனினும், தற்போது போதேகோஷி ஆற்றில் ஏற்பட்டுள்ள பேரழிவின் முழுமையான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கிய நேபாளத்திற்கு இந்தியா உதவிக்கரம்! 37.5 டன் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டது 2-வது விமானம்!