மேற்காசியப் போர் பதற்றத்தின் மத்தியில், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் இஸ்ரேல் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட கடுமையான கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அந்தப் பதிவை அமைச்சர் நீக்கியுள்ளார்.
அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி பேச்சுக்கு பாகிஸ்தான் இன்று இஸ்லாமாபாத்தில் மத்தியஸ்தம் வகித்து வரும் நிலையில், ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் “இஸ்ரேல் ஒரு தீய சக்தி. இது மனித குலத்திற்கான சாபம். இந்நாட்டை உருவாக்கியவர்களை நரகத்தில் போட வேண்டும். லெபனான், காசா, ஈரானில் இனப்படுகொலையைத் தொடர்கிறது” எனப் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்து உடனடியாக சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதற்கு உடனடி பதிலடி கொடுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “பாகிஸ்தான் ராணுவ அமைச்சரின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது. அமைதிக்கான நடுவர் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஒரு நாட்டிடமிருந்து இத்தகைய பேச்சு வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் கண்டனம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரானுடன் ட்ரம்ப் ஒப்பந்தம்? இஸ்ரேல் நலன்களை US பாதுகாக்கும்! நெதன்யாகு நம்பிக்கை!

நெதன்யாகுவின் எச்சரிக்கைக்குப் பிறகு, கவாஜா ஆசிப் தனது பதிவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கினார்.
பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, “அமெரிக்கா-ஈரான் அமைதி பேச்சை பாகிஸ்தான் நடத்தும் முக்கிய நேரத்தில், ஒரு அமைச்சர் ஒரு தரப்புக்கு எதிராக இவ்வளவு கடுமையாகப் பேசுவது நாட்டின் நடுநிலையை கேள்விக்குள்ளாக்குகிறது. இது நாட்டின் தூதரக முயற்சிகளை சீர்குலைக்கும். அமைச்சர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு முன் நாட்டின் நலனை முன்னிறுத்த வேண்டும்” என அறிவுறுத்தினார்.
இந்தச் சம்பவம், பாகிஸ்தான் அரசுக்குள் உள்ள உள் முரண்பாடுகளையும், வெளியுறவுக் கொள்கையில் ஏற்படும் சிரமங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. அமைதி பேச்சு நடைபெறும் நேரத்தில் இத்தகைய கருத்துகள் வெளியாவது, பாகிஸ்தானின் நடுநிலை அணுகுமுறையை பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: லெபனானுடன் பேச்சு நடத்த இஸ்ரேல் சம்மதம்!! அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுக்கு தயார்!!