பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியை அடுத்துள்ள மாலிர் மாவட்ட சிறைச்சாலையானது, பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான சிறைச்சாலைகளில் ஒன்றாகும். இங்கு போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட முக்கிய குற்றங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கராச்சி அருகே நேற்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.2 என அதிகாலை 1.05 மணிக்கு முதல் நிலநடுக்கம் கராச்சியின் கதாப் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து 3.6 என்ற அளவில் அதே பகுதியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து 3.2 என்ற அளவில் கொய்தாபாத் நகரை மையமாகக் கொண்டு மூன்றாவதாக ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதி அடைந்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
இதையும் படிங்க: War முக்கியமில்ல.. வளர்ச்சி தான் முக்கியம்.. பிரேசிலில் அடித்து தூள் கிளப்பும் சசிதரூர்..!
கராச்சியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக மாலிர் சிறையில் கைதிகளும் பதற்றம் அடைந்தனர். கட்டிடங்கள் குலுங்கியதால் சிறை கைதிகள் பயத்தில் அங்கும் இங்கும் ஓடினர். அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கராச்சி சிறைச்சாலையில் சுமார் 700 முதல் 1000 கைதிகள் அவர்களது சிறை அறைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரதான வாயிலின் அருகில் ஒன்று சேர்க்கப்பட்டிருந்தனர். இதனைப் பயன்படுத்தி, அந்தக் கைதிகளில் ஒரு குழுவினர் காவலர்களுக்கு எதிராக மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு வெடித்த வன்முறையில் அந்தக் கைதிகள் காவலர்களின் ஆயுதங்களைக் கைப்பற்றி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். இதில், இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு கைதி பலியாகியுள்ளார். மேலும், 4 பாதுகாப்பு வீரர்கள் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, பல்வேறு முக்கிய குற்றவழக்குகளில் கைதான 216 சிறைக்கைதிகள் அங்கிருந்து தப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், கராச்சி நகரம் முழுவதும் தற்போது உச்சக்கட்ட எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, வெளியான விடியோக்களில் சிறையிலிருந்து தப்பிய கைதிகள் அனைவரும் கராச்சியின் தெருக்களில் சுற்றி வருவதும், தாங்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகக் கூறுவதும் பதிவாகியுள்ளன.

இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்; சம்பவம் நடந்த நேரத்தில் மாலிர் சிறையில் 6,000 க்கும் மேற்பட்ட கைதிகள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் ஈடுபட்டவர்கள். நிலநடுக்கத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 600க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கள் முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அப்போது சிறையில் இருந்து 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றனர். அவர்களில் 80க்கும் மேற்பட்ட கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். 135க்கும் மேற்பட்ட கைதிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து, சிந்து மாகாணத்தின் உள்துறை அமைச்சர் ஜியா-உல்-ஹசன் லஞ்சார் கூறுயிதாவது: “நிலநடுக்கத்தால் சிறையின் சுவரில் எந்தவொரு விரிசலும் உண்டாகவில்லை. அங்கு நிலவிய பரபரப்பான சூழலைப் பயன்படுத்திய கைதிகள் காவலர்களின் ஆயுதங்களைப் பறித்து கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்து தப்பியுள்ளனர்.” என உறுதி செய்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள நிலையில் இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனக் கூறினார்.
இதையும் படிங்க: பாக். சொன்னதை விட அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்..! அதிர வைக்கும் பாகிஸ்தானின் ஆவணம்..!