நாடாளுமன்றத்தில் சமீபத்தில் வெளியான அதிகாரப்பூர்வ தரவுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு மொத்தம் ரூ.462.58 கோடி செலவு செய்துள்ளது. இந்தத் தொகையில் விமானப் பயணம், தங்குமிடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அடங்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கான பயணங்களுக்கு மொத்தத் தொகையில் சுமார் 16% செலவிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான பயணங்களுக்கு தலா 9% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2025 பிப்ரவரியில் பிரான்ஸ் பயணத்துக்கு சுமார் ரூ.25.5 கோடி செலவானது மிக அதிகமாகக் கருதப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக 2023 ஜூன் மாத அமெரிக்கப் பயணத்துக்கு ரூ.22.8 கோடி செலவிடப்பட்டது.
ஒப்பீட்டளவில், மோடியின் முதல் ஆட்சிக்காலம் (2014-2019) ரூ.446.52 கோடி செலவு செய்யப்பட்டது. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆட்சிக்காலங்களில் (2021-2025) ரூ.462.58 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 2020 மற்றும் 2021-ன் முற்பகுதியில் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளிநாட்டுப் பயணங்கள் பெருமளவு குறைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சபாநாயகர் நாற்காலில் அமர மாட்டேன்!! எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்! ஓம் பிர்லா அதிரடி!

இந்த செலவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி எழுப்பியுள்ளன. அதற்கு பதிலளித்த மத்திய அரசு, “இந்தப் பயணங்கள் இந்தியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பப் பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கும் மிகவும் அவசியம்” என விளக்கம் அளித்துள்ளது. ஜி20, பிரிக்ஸ் போன்ற சர்வதேச உச்சிமாநாடுகளில் இந்தியாவின் பங்களிப்பை உறுதி செய்ய இத்தகைய பயணங்கள் தேவை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் நாட்டின் நலனுக்காகவா அல்லது அதிக செலவு ஏற்படுத்தும் வீண் செலவா என்பது தற்போது சர்ச்சையாக உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற செலவுகள் குறித்து மேலும் வெளிப்படைத்தன்மை தேவை என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: குண்டுகள் முழங்க!! அரசு மரியாதையுடன் அஜித் பவார் உடல் தகனம்! தலைவர்கள் பங்கேற்பு!