புழல் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து நண்பகல் 12மணியளவில் 200கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளது. உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே வேகமாக நிரம்பி வந்தது.
ஏற்கனவே 2 முறை புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. இன்று காலை 6மணி நிலவரப்படி புழல் ஏரியில் 2954 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது. 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 19.71 அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 1115கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: விட்டு விலகாத மோந்தா பீதி...!! இன்றும் 6 மாவட்டங்களுக்கு "Red Alert"... 16 மாவட்டங்களுக்கு "Flood Alert"...!
புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து மீண்டும் 3வது முறையாக நண்பகல் 12மணியளவில் 200கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சுமார் 13.5கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று சேரவுள்ளது. நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் கால்வாய் அருகில் சென்று வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பது, ரீல்ஸ் பதிவிடுவது, குளிப்பது, துணி துவைப்பது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: இதை எக்காரணம் கொண்டும் செய்யாதீங்க... புழல் ஏரியிலிருந்து சீறிப்பாயும் வெள்ளம்... சென்னைக்கு பறந்தது முக்கிய எச்சரிக்கை...!